ரணிலுடன் பேசிய நிர்மலா! கைதான 22 இந்திய மீனவர்களும் உடனே விடுதலை!!

யாழ்ப்பாணம், பருத்தித்துறைக் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையினரால் நேற்று மதியம் இரண்டு படகுகளுடன் மடக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, காங்கேசன்துறை துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்ட 22 இந்திய மீனவர்களும், இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் தலையீட்டின் பேரில் உடனடியாக நேற்று நள்ளிரவே அவர்களின் படகுகளுடன் விடுவிக்கப்பட்டுத் தமிழகத்துக்குப் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

பருத்தித்துறைக் கடற்பரப்பில் இரண்டு படகுகளில் அத்துமீறி நுழைந்து, கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றத்துக்காக நேற்று மதியம் 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். நேற்று மாலை 5 மணிக்குக் காங்கேசன்துறைத் துறைமுகத்துக்கு அவர்கள், அவர்களின் படகுகளுடன் கொண்டு வரப்பட்டனர்.

இவ்வாறு இராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட செய்தி இராமேஸ்வரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

இதேநேரம் இராமேஸ்வரத்துக்கு இரு நாள் பயணமாக இந்தியாவின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று சென்ற நிலையில், மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் நிதி அமைச்சரை நேரில் சந்தித்து கைதான தமது உறவுகளை அவர்களின் படகுகளுடன் உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

மீனவர்களின் கோரிக்கையின் பேரில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைத் தொடர்பு கொண்ட இந்திய நிதி அமைச்சர், மீனவர்களின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுக்கக் கோரினார்.

அதனையடுத்து 22 மீனவர்களையும் கையோடு விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அவர்களது படகுகளில் அவர்களை ஏற்றி அவர்களை இலங்கையின் கடல் எல்லை வரை இலங்கைக் கடற்படையினர் கூட்டிச் சென்றனர். அங்கிருந்து இன்று அதிகாலை தமிழகத்துக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.