நமக்காகப் போராடியவர்களை நாம் கௌரவிக்கும் வாரம் இது – நாடாளுமன்றில் சுமந்திரன் உரை.

”எங்களுக்கு இது ஒரு முக்கியமான வாரம். எங்களுக்காகப் போராடி மடிந்தவர்களை நாங்கள் கௌரவித்து வணங்கும் வாரம் இது.”

இவ்வாறு இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

இன்று நாடாளுமன்றத்தில் அவர் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையில் மாவீரர் வாரம் குறித்து அவர் குறிப்பிட்ட விடயங்கள் வருமாறு:-

“இது ஒரு முக்கியமான வாரம். எங்களுக்காகப் போராடியவர்களுக்காக நாம் அவர்களை கௌரவிக்கும் வாரம் இது. அந்தவகையில் அதை வெளிப்படுத்துவதற்கு நான் தயங்க மாட்டேன்.

ஏன் அவர்கள் எங்களுக்காகப் போராடினார்கள்? ஏனென்றால் தேசிய நீரோட்டத்தில் இருந்து – வாழ்க்கையில் இருந்து – (உங்களால்) நாம் தூக்கி வீசப்பட்டோம். எங்களுக்கு வேறு வழி இருக்கவில்லை.

நாம் அந்தச் சிந்தனையில் இப்போது இல்லை. ஐக்கியப்பட்ட, பிளவுபடாத, பிரிக்கப்படாத, ஒன்றுபட்ட நாட்டுக்குள் சேர்ந்து வாழ்வதற்கு நாங்கள் இன்னும் தயாராகவே இருக்கின்றோம் என்பதை நாம் மிகத் தெளிவாக வெளிப்படுத்தி இருக்கின்றோம். அதற்கு உங்கள் பிரதிபலிப்பு எப்படி இருந்தது? எப்படி இருக்கின்றது? முடிவு உங்களின் கைகளில். நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். எங்களை எப்போதும் இப்படி தனித்து நீங்கள் ஒதுக்கி விட முடியாது.

எங்களுக்காகப் போராடியவர்களின் மறைவை அவர்களின் உறவுகள் வடக்கு, கிழக்கில் நினைவு கூரும் இச்சமயத்தில், எங்களை நீங்கள் ஒதுக்கித் தள்ளி விட முடியாது என்பதை மீண்டும் குறிப்பிடுகின்றேன்.

அதிக எண்ணிக்கை உங்கள் பக்கம் இருப்பதால் மட்டும் உங்கள் கருத்து சரி என்று ஆகிவிடாது. அத்தகைய அதிக எண்ணிக்கை பல சமயங்களில் உங்களைத் தவறானவர்களாக – பிழையானவர்களாகச் செயற்பட வைத்து விடும்.

நீங்கள் உங்கள் எண்ணிக்கையை வைத்து எங்களை முற்றாக அழித்து விடலாம் என்று நினைக்கின்றீர்கள். அதைத்தான் இந்தச் சபையிலும் கூட நீங்கள் செய்கின்றீர்கள்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.