மாவீரர் தினத்துக்கு அனுமதி வழங்குவது கோழைத்தனமாம்; பிரபாகரனுடன் கூட்டமைப்பையும் அழித்திருக்க வேண்டுமாம் – சரத் வீரசேகரவின் வியாக்கியானம் இது.

“உலகத்தில் மிகவும் கொடிய பயங்கரவாத அமைப்பாகக் கருதப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை அழித்துள்ளோம். இந்நிலையில், மாவீரர் தினத்துக்கு அனுமதி வழங்குவது அனுதாபமல்ல, அது கோழைத்தனம்.”

– இவ்வாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர எம்.பி. தெரிவித்தார்.

“விடுதலைப்புலிகளின் பிரபாகரனை அழித்தவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அழித்திருக்க வேண்டும். அவர்களை அழிக்காமல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பாரிய தவறிழைத்துள்ளார். மஹிந்த ராஜபக்‌ஷவின் அன்றைய அனுதாபம் இன்று பூகம்பமாக மாற்றமடைந்துள்ளது.” – என்றும் சரத் வீரசேகர எம்.பி. மேலும் கூறினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (23) நடைபெற்ற 2024 ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தமது உரையில் மேலும் கூறியதாவது:-

“பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதியே பொறுப்புக் கூற வேண்டும். ஆனால், இன்று அவருக்கு அரசமைப்புப் பேரவையால் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. இதனால்தான் நான் அரசமைப்பின் 19 ஆவது திருத்தத்துக்கும், 21 ஆவது திருத்தத்துக்கும் எதிராக வாக்களித்தேன்.

உலகத்தில் மிகவும் கொடிய பயங்கரவாத அமைப்பாக கருதப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்துள்ளோம். இலங்கையில் புலிகள் அமைப்பை அழிந்திருந்தாலும் புலிகளின் கொள்கையுடைவர்கள் சர்வதேச மட்டத்தில் துடிப்புடன் உள்ளார்கள்; செயற்டுகின்றார்கள். இலங்கையில் மீண்டும் யுத்தம் ஒன்று தோற்றம் பெற்றால் அதனை எதிர்கொள்வதற்கு இராணுவத்தினர் தயாராக உள்ளார்களா என்பதை ஆராய வேண்டும்.

யுத்தத்தை வெற்றிக் கொண்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஆஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகள் விசா வழங்குவதில்லை. இராணுவ அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தாக்கம் செலுத்தியுள்ளது. இந்நிலை தற்போதை இராணுவ அதிகாரிகளுக்கும் சேவை ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஜெனிவா விவகாரத்தில் இலங்கை தவறிழைத்துள்ளது. 2009.01.19 ஆம் திகதி யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து 2009.05.27 ஆம் திகதி ஜேர்மனி உட்பட 17 நாடுகள் ஒன்றிணைந்து இலங்கைக்கு எதிராக பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்தன. யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இலங்கைக்கு வருகை தந்த ஐக்கிய நாடுகள் சபையின் அப்போதைய செயலாளர் நாயகம் பாங்கி மூன் பல பரிந்துரைகளை முன்வைத்தார்.

அதனைத் தொடர்ந்து தருஸ்மன் அறிக்கை சமர்ப்பிக்கப்டப்பட்டது. அதில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் எனப் பொய்யான தரப்படுத்தல் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கைக்கு முரணாக பரணகம குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நல்லாட்சி அரசு 30/1 பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியது. யுத்த காலத்தில் இடம்பெற்ற யாதார்த்த உண்மைகள் ஜெனிவாவுக்குக் குறிப்பிடப்படவில்லை. ஆகவே, இனியாவது இந்த தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும்.

மாவீரர் தினம் பற்றி தற்போது பேசப்படுகின்றது. நாட்டைப் பிளவுப்படுத்த ஆயுதமேந்திய பயங்கரவாதிகளை நினைவுகூர்வதற்கு அனுமதி வழங்குவது அனுதாபமல்ல, அது கோழைத்தனமானது என்பதை பகிரங்கமாகக் குறிப்பிடுவேன்.

மாவீரர் தினம் என்று குறிப்பிட்டுக் கொண்டு இல்லாத பிரச்சினைகளை தோற்றுவிக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும், ஏனைய தமிழ் அரசியல் தரப்பினரும் முயற்சிக்கின்றார்கள். விடுதலைப்புலிகள் தமிழர்களைப் பணயக் கைதிகளாக வைத்திருந்த போது இவர்கள் எங்கு சென்றார்கள்? 2 இலட்சத்து 95 ஆயிரம் பேரை இராணுவத்தினர் மீள்குடியேற்றம் செய்தார்கள். 8 ஆயிரம் தமிழர்களுக்கு இராணுவத்தினர் தமது சொந்த நிதியில் வீடு கட்டிக் கொடுத்தார்கள். அப்போது கூட்டமைப்பினர் தமிழ்த் தேசியம் பற்றிப் பேசிக் கொண்டு வரவில்லை.

விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆயுதமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகின்றது. கூட்டமைப்பினர் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்து பதவி பிரமாணம் செய்வதற்கு முன்னர் பிரபாகரன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பாரிய தவறிழைத்துள்ளார். ஹிட்லர், முசோலினி, சதாம் ஹுசைன் ஆகியோர் அழிக்கப்பட்டதன் பின்னர் அவர்களின் அரசியல் செயற்பாடுகள், அரசியல் கட்சிகள் அழிக்கப்பட்டன. அதேபோல் பிரபாகரனை அழித்தவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அழித்திருக்க வேண்டும். மஹிந்த ராஜபக்‌ஷவின் அனுதாபம் இன்று பூகம்பமாக மாற்றமடைந்துள்ளது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.