சென்னையில் 29 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ்… 5 டோஸ் தடுப்பூசி போட அறிவுறுத்தல்

சென்னையில் இரவு நேரங்களில் பொதுமக்கள் தெருக்களில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். பக்கத்து தெருவிற்கு கூட வாகனத்தில் செல்வதை காண முடிகிறது. ஏதோ வழிப்பறி கொள்ளையர்கள் அதிகரித்து விட்டதாக எண்ண வேண்டாம். அவர்களுக்கு நிகரான ஆபத்துடன் சென்னையில் முக்கிய தெருக்களை ஆக்ரமித்துள்ளன தெருநாய்கள்.

சென்னை திருவொற்றியூரில், பரபரப்பான சாலையில், ஒரு மணிநேரத்திற்குள் 10 பள்ளி மாணவர்கள் உட்பட 29 பேரை தெருநாய் துரத்தி துரத்தி கடித்துள்ளது. இதனால் ஆந்திரமடைந்த பொதுமக்கள் வெறிபிடித்த தெருநாயை அடித்தே கொலை செய்தனர். நன்றியுள்ள காவல் நாயகனாக கருதப்படும் நாய்கள், தற்போது உயிருக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஜீவனாக மாறி வருகின்றன. அதற்கு, இதுபோன்ற சம்பவங்களே சான்றாக உள்ளன. தெருநாய்களை கட்டுப்படுத்துவதில், அரசு மேற்கொள்ளும் இனவிருத்தி கட்டுப்பாடு விதிகள், பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கருத்தடை செய்யப்பட்ட நாய்கள், ஆக்ரோஷமாக மாறுவதில்லை என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் உறுதி அளிக்கின்றனர். தெருநாய்கள் காட்டு விலங்கு அல்ல என்று சுட்டிக்காட்டும் இவர்கள், பொதுமக்களின் சீண்டல்களால், அவை கடிக்கும் சூழலுக்கு தள்ளப்படுவதாக கூறுகின்றனர். எனவே, தெருநாய் கடியில் இருந்து தற்காத்துக் கொள்ள பல்வேறு வழிகள் இருப்பதாக விலங்குகள் ல ஆர்வலர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.

ரேபிஸ் தொற்று ஏற்பட்ட நாய்கள் 10 நாட்களில் உயிரிழந்து விடுவதால், தெருநாய்கள் கடித்தாலே ரேபிஸ் தொற்று ஏற்படும் என்று அச்சப்பட தேவையில்லை என்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், தெருநாய் கடித்தால் அலட்சியப்படுத்தக் கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதனிடையே, திருவொற்றியூரில் 29 பேரை கடித்த நாய், அடித்துக் கொல்லப்பட்ட நிலையில், அதை கால்நடை மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்தனர். அதில், இறந்த நாய்க்கு ரேபிஸ் நோய் இருந்தது உறுதியானது. இதனால், வெறிநாய் கடிக்கு ஆளான 29 பேரும் 5 டோஸ் தடுப்பூசி கட்டாயம் செலுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், ரேபிஸ் நோய் தாக்குதலுக்கு உள்ளான நாய் கடித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெரு நாய் தொல்லை குறித்து புகார் அளிக்க மாநகராட்சி சார்பில் இலவச உதவி எண் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் 5 இடங்களில் நாய்கள் இனவிருத்தி கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. ஆனால், தெருநாய்களின் தொல்லை குறைந்தபாடில்லை. எனவே, அரசு இதில் தனிக் கவனம் செலுத்தி, தெருநாய்களால் அதிகரித்து வரும் மனித-மிருக மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், திருவொற்றியூர் சம்பவத்தை தொடர்ந்து சென்னை முழுவதும் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து வெறிநாய்க்கடி தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.