ரணிலின் சூழ்ச்சி வெற்றி பெற எவருமே இடமளிக்கக் கூடாது! – சபையில் விஜித ஹேரத் வலியுறுத்து.

தேர்தல்களை ஒத்திவைக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சூழ்ச்சிகள் வெற்றி பெற எவரும் இடமளிக்கக் கூடாது என்று மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் வலியுறுத்தினார்.

காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு அவதானம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2024 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தின் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சுக்கான செலவுத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

“நாட்டின் அரச இயந்திரத்தில் அரச சேவையாளர்கள் முக்கியமானவர்களாக உள்ளார்கள். தற்போதைய நிலையில் அரச சேவையாளர்களால் வாழ முடியாத நிலை காணப்படுகின்றது.

கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது வாழ்க்கை செலவுகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன. ஆனால், வருமானம் ஒரு சதத்தில் கூட உயர்வடையவில்லை.

வாழ்க்கைச் செலவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்கின்றோம் என்று அரசு குறிப்பிடுகின்றது. ஆனால், நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

நான்கு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பம் தமது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள ஒரு மாதத்துக்கு 74 ஆயிரம் ரூபாவை செலவிட வேண்டியுள்ளது எனப் புள்ளிவிபரவியல் திணைக்களம் குறிப்பிடுகின்றது. 75 ஆயிரம் ரூபாவுக்கு மேல் சம்பளம் பெறும் எத்தனை அரச சேவையாளர்கள் உள்ளனர்?

ஒரு பட்டதாரி அரச சேவையாளரின் அடிப்படைச் சம்பளம் 31 ஆயிரம் ரூபாவாக உள்ளது. அரசின் புதிய வரி விதிப்பு அரச சேவையாளர்களுக்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த மக்களுக்களும் பாதிக்கப்படுவார்கள்.

அரச சேவையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்க ஒரு மாதத்துக்கு 133 பில்லியன் ரூபாவை செலவழித்து விட்டு, அரச சேவையாளர்கள் உட்பட ஒட்டுமொத்த சேவை தரப்பினரிடமிருந்து மாதாந்தம் 1094 பில்லியன் ரூபாவை வரி வருமானம் ஊடாகப் பெற அரசு தீர்மானித்துள்ளது.

நான்கு பேர் உள்ள குடும்பத்துக்கு 74 ஆயிரம் ரூபா ஒரு மாதத்துக்கு தேவை என்று குறிப்பிடுகின்ற நிலையில் 10 ஆயிரம் ரூபா குறைந்தபட்ச கொடுப்பனவு ஒருபோதும் சாதகமாக அமையாது என்பதால் எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆயிரம் ரூபா சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அரச சேவையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றார்கள். இந்தக் கோரிக்கைக்கு அரசு கவனம் செலுத்தவில்லை.

பெருந்தோட்ட மக்கள் பாரிய போராட்டத்துக்கு மத்தியில் ஆயிரம் ரூபா ஒரு நாள் சம்பளத்தைப் பெற்றுக்கொண்டார்கள். ஆனால், இன்று 1000 ரூபா ஒரு நாள் செலவுகளுக்குப் போதுமா? குறைந்தபட்சம் 2 ஆயிரத்து 500 ரூபா நாள் சம்பளத்தைப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்.

அரச சேவைகளுக்கான ஆட்சேர்ப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆட்சேர்ப்புக்கு இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு முழுமையாக ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது. இந்தத் தீர்மானத்தை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2016 ஆம் ஆண்டு எடுத்தார். இவ்வாறான சவால்களுக்கு மத்தியில் தான் இன்று 14 இலட்சத்துக்கும் அதிகமானோர் அரச சேவையில் ஈடுபடுகின்றார்கள்.

கிராம சேவகர் சேவையில் பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன. 2016 ஆம் ஆண்டு புதிய ஆட்சேர்ப்புக்கான பரீட்சை இடம்பெற்றது. பெறுபேறுகளும் வெளியாகியுள்ளன. ஆனால், இன்றுவரை நியமனங்கள் வழங்கப்படவில்லை. கிராம சேவகர் அலுவலகங்களுக்கு மாதாந்தம் வாடகையாக 2 ஆயிரத்து 500 ரூபா வழங்கப்படுகின்றது. தற்போதைய வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் 2 ஆயிரத்து 500 ரூபா எந்தளவுக்குப் போதுமானது? கிராம சேவகர் சேவையில் பிரச்சினைகளுக்கு அரசு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்.

1997 ஆம் ஆண்டு சேவையில் இருந்து ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவு பிரச்சினைகளுக்கான தீர்வு எட்டப்படவில்லை. ஓய்வூதியக் கொடுப்பனவு பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பல அரச சேவையாளர்கள் உயிரிழந்துள்ளார்கள். ஓய்வூதியத் திணைக்களத்தின் பணிப்பாளரின் பெயரும் ஓய்வூதியக் கொடுப்பனவு பிரச்சினைக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டப் பகுதிகளில் பிரதேச சபைகளில் மொழிப் பிரச்சினை காணப்படுகின்றது. தமிழ் மொழி பேசுபவர்கள் பிரதேச சபைகளில் இல்லாத காரணத்தால் பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அம்பகமுவ, நுவரெலியா பிரதேச சபைகளில் இந்தப் பிரச்சினை காணப்படுகின்றது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் தேர்தலுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் நடக்கும் என்று ஜனாதிபதி குறிப்பிட வேண்டிய தேவையில்லை.

பொதுத்தேர்தலைப் பிற்போடுவதற்கு ஜே.ஆர்.ஜயவர்தன எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. அரசமைப்பால் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும். அடுத்த ஆண்டு தேர்தல்களை நிச்சயம் நடத்த வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் பாதுகாக்கப்படும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.