ஜனாதிபதித் தேர்தலில் சஜித் போட்டியிட்டால் தோல்வி உறுதி! – ரணிலுடன் சேர்ந்தால் பிரதமராகலாம் என்று ஐ.தே.க. அழைப்பு.

“ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தால் சஜித் பிரேமதாஸவின் அரசியல் வாழ்வு முடிந்துவிடும். எனவே, பிரதமர் வேட்பாளர் பதவியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படும் முடிவை அவர் தற்போது எடுக்க வேண்டும்.”

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரான அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“சஜித் பிரேமதாஸவை பிரதமர் வேட்பாளர் பதவியை ஏற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படுமாறு நான் மீண்டும் அழைப்பு விடுக்கின்றேன். ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் அவர் ஐந்து வருடங்கள் கற்றுக்கொண்டால் நிச்சயம் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க முடியும்.

அவ்வாறு இல்லாமல் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க முற்பட்டால் இறுதியில் தோல்வி ஏற்படும். இவ்வாறு இரு தடவைகள் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தால் அத்துடன் அவரின் அரசியல் வாழ்வும் முடிந்துவிடும். எனவே, சஜித்துக்கு மூளை இருந்தால் அவர் சாதகமான முடிவை எடுக்க வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.