சூரத் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து: 7 உடல்கள் மீட்பு!

குஜராத், சூரத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலை தீ விபத்தில் சிக்கியவர்கள் ஏழு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

சூரத்தில் உள்ள சச்சின் ஜிஐடிசி பகுதியில் செயல்பட்டு வரும் ரசாயன தொழிற்சாலையில் புதன்கிழமை காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு 15 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு 9 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதையடுத்து இந்த விபத்தில் சிக்கியவர்களில் ஏழு பேரின் உடல்களை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். மேலும், காயமடைந்த 24 பேர் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக ஆட்சியர் தெரிவித்தார்.

இறந்தவர்கள் திவ்யேஷ் படேல் (நிறுவன ஊழியர்), சந்தோஷ் விஸ்வகர்மா, சனத் குமார் மிஸ்ரா, தர்மேந்திர குமார், கணேஷ் பிரசாத், சுனில் குமார் மற்றும் அபிஷேக் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.