வவுனியாவில் வயோதிபத் தம்பதி கொடூரமாக வெட்டிப் படுகொலை!

வவுனியா, செட்டிகுளம் நகரப் பகுதியில் இன்று கணவனும் மனைவியும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

செட்டிகுளம் பிரதான வீதியில் இந்தத் தம்பதியினரின் மகன் வியாபார நிலையம் ஒன்றை நடத்தி வரும் நிலையில் அதற்குப் பின்னால் உள்ள தங்கும் இடத்தில் மேற்படி தம்பதியினர் வசித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு வழமைபோல் அவர்களது மகன் வியாபார நிலையத்தை மூடிவிட்டு அண்மையில் உள்ள தனது வீட்டுக்குச் சென்ற போது தம்பதியினர் வியாபார நிலையத்துக்குப் பின்பாகவுள்ள தங்கும் இடத்தில் உறங்கச் சென்றனர்.

இன்று காலை வியாபார நிலையத்தைத் திறப்பதற்காக வருகை தந்த மகன் தனது தாயும் தந்தையும் வெட்டுக்காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்தமையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

சம்பவம் தொடர்பாகச் செட்டிகுளம் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இந்தச் சம்பவத்தில் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த 72 வயதான பசுபதி வர்ணகுலசிங்கம் என்ற வயோதிபரும், அவரது மனைவியான 68 வயதான கனகலட்சுமி என்பவருமே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களது சடலங்களுக்கு அருகில் மூன்று கத்திகள் இரத்தங்களுடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அந்தக் கத்திகளாலேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் 5 பவுண் பெறுமதிமிக்க தங்க நகை ஒன்றும் காணாமல்போயுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தப் படுகொலை திருட்டில் ஈடுபடும்போது இடம்பெற்றதா அல்லது தனிப்பட்ட தகராறு காரணமாக நடைபெற்றதா போன்ற கோணங்களில் செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.