அலெக்ஸ் படுகொலை வழக்கு ஜனவரி 2 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை இளைஞர் நாகராசா அலெக்ஸ் படுகொலை வழக்கில் மரண விசாரணை தொடர்பான கட்டளை எதிர்வரும் ஜனவரி 2ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மரணித்த நபரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய பொலிஸார், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட சிலர் மரண விசாரணையில் சாட்சியம் வழங்கினர்.

இதேவேளை, மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த முன்னர் உயிரிழந்தவர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தெல்லிப்பளை சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை, மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த நபரை அனுமதித்தமை தொடர்பான மருத்துவ அறிக்கையைச் சமர்ப்பிக்க ஆவன செய்யுமாறு நீதிமன்ற பதிவாளருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா உத்தரவிட்டார்.

மரண விசாரணை தொடர்பான கட்டளைக்காக எதிர்வரும் ஜனவரி 2ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
வழக்கில் உயிரிழந்த இளைஞர் சார்பில் பெருமளவான சட்டத்தரணிகள் ஆஜராகினர்.

வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞர் சித்திரவதைகளுக்கு உள்ளான நிலையில் நவம்பர் 19ஆம் திகதி உயிரிழந்தார்.

Leave A Reply

Your email address will not be published.