கொலைக் கலாசாரம் ராஜபக்சக்களுக்குப் புதியதல்ல! மொட்டுவின் மாநாட்டில் பங்கேற்றவர்களை உடனே புனர்வாழ்வுக்கு உட்படுத்துங்கள்!! – மிகிந்தலை விகாராதிபதி வலியுறுத்து.

“கொலைக் கலாசாரம் என்பது ராஜபக்ச குடும்பத்துக்குப் புதிய விடயமல்ல. பஸில் ராஜபக்சவின் மொட்டுக் கட்சி மாநாட்டு உரை இதனையே வெளிப்படுத்துகின்றது. இந்த மாநாட்டில் பங்கேற்றவர்களை உடனடியாகப் புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும்.”

இவ்வாறு மிகிந்தலை விகாரையின் விகாராதிபதியான வலவாஹேனுனவே தம்மரத்ன தேரர் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“எம் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தினால் என்ன நடக்கும் என்பது பற்றி அவர் (பஸில் ராஜபக்ச) எச்சரிக்கை விடுத்திருந்தார். அதாவது கொலை செய்யப்படுவீர்கள் என்பதே அந்த எச்சரிக்கையாகும். அவர்கள் (ராஜபக்சக்கள்) சாட்சி இல்லாமல் கொலை செய்தனர். இது எமக்கு தெரியும். எவராவது ஒருவர் தலைதூக்கினால் அவரைக் கொலை செய்தனர். கொலைக் கலாசாரத்தை அவர்கள் முன்னெடுத்தனர். இந்தக் கலாசாரத்தை அவர்களுக்கு மீண்டும் வழங்குவதா?

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மாநாட்டுக்குச் சென்றவர்களை உடனடியாகப் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். நாட்டு மக்கள் திண்டாடும் நிலையில், மனச்சாட்சி உள்ள எவரும் அந்த மாநாட்டுக்குச் சென்றிருக்கமாட்டார்கள். எனவே, அவர்களின் மனநிலை புரிகின்றது. எனவே, மொட்டுக் கட்சி மாநாட்டில் பங்கேற்றவர்களை உடனடியாகப் புனர்வாழ்வுக்கு உட்படுத்தவும். இது தொடர்பில் புனர்வாழ்வு ஆணையாளரிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.