நண்பனின் சொத்துக்காக 7 நாட்களில் அடுத்தடுத்து 6 பேர் கொலை..!

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள முட்டுகூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பிரசாத் மற்றும் பிரசாந்த். இருவரும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். தொழிலில் நஷ்டம், குடும்ப தேவை என பல்வேறு காரணங்களால் பிரசாத் பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி கடன்காரர் ஆகிவிட்டார்.

பிரசாத் ஏற்கனவே நிறைய கடன் வாங்கி இருந்ததால் அவரால் வங்கியில் இருந்து கடன் வாங்க முடியவில்லை. பிரசாத்திற்கு உதவுவதாக தெரிவித்த நண்பன் பிரசாந்த் வங்கியில் கடன் வாங்கி கொடுப்பதாக உறுதி அளித்து இருக்கிறார். மேலும், பிரசாத் பெயரில் இருக்கும் வீட்டை தன்னுடைய பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்தால் வங்கியில் இருந்து உடனே கடன் வாங்கி விடலாம் என்றும் தெரிவித்துள்ளார். பிரசாந்தின் பேச்சை அப்படியே நம்பிய பிரசாத், தன்னுடைய வீட்டை அவருக்கு பத்திரப்பதிவு செய்தும் கொடுத்தார்.

வீட்டை எழுதிக் கொடுத்து நீண்ட நாட்கள் கடந்தும் பிரசாந்த் வங்கியில் இருந்து கடன் வாங்கி கொடுக்கவில்லை. இதனால், வீட்டை தனது பெயருக்கு மீண்டும் மாற்றிக் கொடுக்கும்படி தெரிவித்துள்ளார் பிரசாத். அந்த வீட்டை எப்படியாவது அபகரித்து விட வேண்டும் என்ற திட்டத்துடன் இருந்த பிரசாந்த், நண்பன் பிரசாத்தை கொலை செய்து விட முடிவு செய்தார்.

கடந்த 9 ஆம் தேதி பிரசாத்தை அதே பகுதியில் உள்ள டிச்சிப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை அருகில் காட்டுப்பகுதியில் கொலை செய்து உடலை புதைத்து விட்டார் பிரசாந்த். பின்னர். பிரசாத்தின் மனைவி ரமாவிடம் சென்று, கடன் கொடுத்தவர்கள் புகார் அளித்ததால் பிரசாத்தை போலீசார் பிடித்து வைத்திருப்பதாக தெரிவித்தார். பிரசாத்தை பார்க்க காவல் நிலையம் செல்லலாம் எனக்கூறி, ரமாவை அழைத்து சென்று பாசரா நகரம் அருகே காட்டுப்பகுதியில் வைத்து அவரை அடித்து கொலை செய்து, அவரது உடலை கோதாவரி நதியில் வீசினார்.

பிரசாத்தின் தங்கையிடம் சென்ற பிரசாந்த், உங்கள் அண்ணன் மற்றும் அவரது மனைவி ரமாவையும் போலீசார் பிடித்து வைத்திருப்பதாக தெரிவித்தார். அவரையும் அழைத்து சென்று கொன்று புதைத்து இருக்கிறார் பிரசாந்த். பிரசாத்தின் குழந்தைகள் 2 பேரையும் கொலை செய்தது உடல்களை ஓடையில் வீசியிருக்கிறார். பிரசாத் குடும்பத்தினரை போலீசார் பிடித்து வைத்திருப்பதாக அவரது மற்றொரு சகோதரியையும் நம்ப வைத்துள்ளார் பிரசாந்த். அவரை தெலங்கானா மாநிலம் காமா ரெட்டி மாவட்டத்துக்கு அழைத்து சென்று கொலை செய்து காட்டுப்பகுதியில் அவருடைய உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து இருக்கிறார். பாதி எரிந்த நிலையில் பெண் ஒருவரின் உடல் கிடப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்ற உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

செல்போன் சிக்னல்களை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில், பிரசாந்த், தனது செல்போன் எண் மூலம் சம்பவ இடத்தில் இருந்து பேசியது தெரியவந்தது. அதை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் பிரசாந்த்தை பிடித்து விசாரிக்க, அவர் 6 கொலைகள் செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது. நண்பன் பிரசாத், அவரது மனைவி, குழந்தைகள், சகோதரிகள் என 6 பேரையும் அடுத்தடுத்து 7 நாட்களில் கொலை செய்துள்ளார் பிரசாந்த்.

இதில் முதல் மூன்று பேரை பிரசாந்த் மட்டும் தனி ஆளாக கொலை செய்தார். அடுத்த, மூன்று பேரை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பிரசாந்த்தை பிடித்த போலீசார், அவரது சகோதரர் மற்றும் கூட்டாளிகள் இரண்டு பேர் என நான்கு பேரை கைது செய்துள்ளனர். பிரசாந்தின் மனைவி ரமாவின் உடல் ஆற்றில் இருந்து கைப்பற்றப்பட்ட நிலையில், மற்றவர்களின் உடல்களை தேடும் பணியில் தெலங்கானா போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.