பகிரங்க விவாதத்துக்குப் பயப்படாமல் வாருங்கள்! – தமிழ்க் கட்சிகளுக்கு டக்ளஸ் மீண்டும் அழைப்பு.

“என்னோடு பகிரங்க விவாதத்துக்குப் பயப்படாமல் வருமாறு தமிழ்க் கட்சிகளுக்கு மீளவும் அழைப்பு விடுக்கின்றேன்.”

இவ்வாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (26) நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாங்கள் முப்பது வருடங்களுக்கு மேலாகச் சொல்லி வருகின்ற எமது அரசியல் நிலைப்பாட்டுக்கு ஏனைய தமிழ்க் கட்சிகளும் தற்போது வந்திருக்கின்றன.

குறிப்பாக இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலமாகக் கொண்டு வரப்பட்ட 13 ஆவது திருத்தத்தை நாம் ஏற்றுக்கொண்டபோது அதனைத் தும்புத்தடியாலும் தொட மாட்டோம் என்று கூறியவர்கள் இன்றைக்கு அது வேண்டும் எனப் பேச்சு நடத்துகின்றனர்.

இதனூடாக அன்று முதல் இன்று வரை உண்மையையும் சாத்தியமானதையுமே நாம் கூறி வருகின்றோம் என்பதை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும். அதாவது அன்று நாம் சொன்னதை நிராகரித்தவர்கள் இன்று அதுவே சரியானது என ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அதனையே வழங்கக் கோருகின்றமை காலம் கடந்த ஞானம்.

எமது மக்களின் பிரச்சினைகளை மேதாவித்தனத்தோடு அணுக முற்பட்டால் இழப்புத்தான் ஏற்படும். ஆகையால் அதிலிருந்து விடுபட்டு நடைமுறைச் சாத்தியமான வழியில் எடுதுரைத்தால் வெற்றி பெறலாம் என்பது எனது அனுபவம்.

குறிப்பாக 13 ஐ ஏற்றுக்கொண்டு மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையும் வேலைத்திட்டமும் எம்மிடம் உள்ளது. ஆனால், மற்றக் கட்சிகளிடம் அப்படியான ஒரே கொள்கையோ அல்லது வேலைத்திட்டங்களோ இல்லை.

உண்மையில் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பதை விட அந்தப் பிரச்சினைகள் தீர்ந்து விடக் கூடாது என்பதற்காகவே அப்பாவி மக்களை ஏமாற்றி உசுப்பேத்துகின்ற சுத்துமாத்து அரசியலைத் தமிழ்க் கட்சிகள் முன்னெடுக்கின்றன.

இங்குள்ள ஒரு எம்.பியுடன் தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றில் பங்குபற்றியிருந்தபோது நான் பல உண்மைகளை வெளிப்படுத்தியிருந்தேன். குறிப்பாக அவர் சார்ந்த கட்சியின் கொள்கை மற்றும் நிலைப்பாடுகள் தொடர்பிலும், அந்தக் கட்சியின் முன்னைய தலைவர்கள் செய்த விடங்கள் குறித்தும் கூறியிருந்தேன்.

அன்று அவ்வாறு எல்லாம் செயற்பட்டவர்கள்தான் இன்றைக்கு வீர வசனங்களைப் பேசி உசுப்பேத்தும் அரசியலைச் செய்கின்றனர்.

உண்மையாகவே இங்குள்ள தமிழ்க் கட்சிகள் பலவற்றுக்கும் பல தடவைகள் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தபோதும் அவர்கள் விவாதத்துக்கு வருவதில்லை.

நான் பொதுவாக அவர்களுக்கு ஒரு சவால் விடுகின்றேன். எமது கட்சிக்கு நீங்கள் நீண்டகாலமாகச் சேறுபூசி எனது குணாதியங்களைஎச் சிதைக்கும் வகையில் செயற்பட்டு வந்தீர்கள். ஆனால், அதைக் குறுகிய காலத்தில் விளங்கப்படுத்த முடியாது என்பதால் உங்களைப் பகிரங்க விவாதத்துக்கு அழைப்பு விடுத்து வந்தேன். ஆனால், நீங்கள் எவரும் விவாதத்துக்கு வருவதில்லை.

ஏனெனில் பகிரங்கமாக விவாதத்துக்கு வந்தால் உங்களின் ஏமாற்று வித்தைகள் தெரியவந்துவிடும் என
அஞ்சுகின்றீர்கள். அத்தோடு துரோகிப் பட்டமும் உங்களுக்குச் சூட்டப்பட்டுவிடும் எனவும் பயப்படுகின்றீர்கள்.

இன்றைய சூழ்நிலையில் என்னோடு பகிரங்க விவாதத்துக்குப் பயப்படாமல் வருமாறு தமிழ்க் கட்சிகளுக்கு மீளவும் அழைப்பு விடுக்கின்றேன்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.