ஜனாதிபதித் தேர்தலில் ரணிலால் வெல்ல முடியாது! – இப்படிக் கூறுகின்றார் விக்கி.

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணிலுக்குச் சாதகமாக களமிறங்கினாலே அன்றி ரணில் விக்கிரமசிங்கவால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்

யாழ்ப்பாணத்தில் நேற்று (26) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தற்போதைய சூழ்நிலையில் 2024 ஆம் ஆண்டு எந்தத் தேர்தல் எப்போது நடக்கும் என்பது தொடர்பில் யாருக்கும் தெரியாது.

முதலில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்துவதற்கு வாய்ப்பு இல்லை. ஏனென்றால் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று அதில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் தற்போதைய ஜனாதிபதியைத் தொடர்ந்து இருக்க அனுமதிக்கமாட்டார்கள் என்ற நிலைப்பாட்டால் ஜனாதிபதித் தேர்தல்தான் முதலில் நடக்கும் என எதிர்வு கூறப்படுகின்றது

அப்படி நடந்தால் கூட நான்கு பிரதான கட்சிகளிலும் முக்கியமானவர்கள் வேட்பாளர்களாகக் களமிறங்கக் கூடும். அவ்வாறு களமிறங்கினால் தனி ஒருவர் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாது போய்விடும்.

அவ்வாறு இருக்கும்போது ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக வருவாரா என்ற கேள்வி எழுகின்றது? ரணில் ஜனாதிபதியாக வரவேண்டுமாக இருந்தால் மொட்டுக் கட்சியின் வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சாதகமாக அமைந்தால் மாத்திரமே ரணில் விக்ரமசிங்கவால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியும்.” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.