இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த ஜீப் வாகனம் மீது தாக்குதல் -கோடீஸ்வர வர்த்தகர் கைது.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த ஜீப் வாகனம், தங்கொட்டுவ பகுதியில் வைத்து தாக்கிச் சேதப்படுத்தப்பட்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் பயணித்த சொகுசு ஜீப் வாகனம், மற்றுமொரு காருடன் மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து, அந்தக் காரில் பயணித்தவர்கள் அமைச்சரின் வாகனத்தைத் தாக்கிச் சேதப்படுத்தியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தங்கொடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் பங்குபற்றச் சென்ற வேளையில் மாரவில மொதரவெல்ல தேவாலயத்துக்கு முன்பாக வங்குவ பிரதேசத்தில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அமைச்சரின் சொகுசு வாகனம் மற்றைய காரைச் சேதப்படுத்தியுள்ளது என்றும், அதில் பயணித்த கோடீஸ்வர தொழில் அதிபர் தனது வாகனத்துக்கு ஏற்பட்ட சேதத்தைப் பார்த்து கடும் ஆத்திரமடைந்து இரும்புக் கம்பியால் இராஜாங்க அமைச்சரின் வாகனத்தைத் தாக்கினார் என்றும் கூறப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் மாரவில பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.