அடுத்த ஜனாதிபதி யார் என்பதைத் தமிழர்களின் வாக்குகளே தீர்மானிக்கும் தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தின் பின்னணியில் ரணில் இருக்கக்கூடும் – மிகவும் அவதானம் தேவை என்கிறார் சாணக்கியன்.

“தமிழ் மக்களுடைய வாக்குகள்தான் அடுத்த ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானிக்கும். எனவே, தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் பேசுபவர்கள் குறித்து நாம் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்களது உள்நோக்கங்களைப் பார்க்க வேண்டும். இதன் பின்னணியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருக்கக்கூடும்.”

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று (28) செய்தியாளர்களைச் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் விடயத்தை மிகவும் பேசும் பொருளாக மாற்றுவதற்குத் தெற்கினுடைய அரச தரப்பினரும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் முயற்சி எடுத்து வருகின்றனர்.

தமிழ் பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டு வரும் கருத்துக்கள் தொடர்பில் தென்னிலங்கை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து அவதானித்து வருகின்றன. அது தொடர்பில் தொலைபேசி ஊடாக எனக்குப் பல அழைப்புக்கள் வந்து கொண்டிருக்கிறன. இதனைப் பார்க்கும்போது தெற்கிலே இருக்கும் பேரினவாத சக்திகள் தமிழ் பொது வேட்பாளர் விடயத்துக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவதன் ஊடாக அதனைப் பிரபல்யப்படுத்துவதாகத் தெரிகின்றது.

இதன் பின்னணியில் உள்ள விடயங்களை நாம் பேசியாக வேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு துரும்புச் சீட்டு. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களுடைய வாக்குகள் இன்றி தனியே சிங்கள மக்களின் வாக்குகளால் மட்டும் ஒருவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படலாம் என்ற நிலை காணப்படும்போது தமிழர் தரப்பில் ஒரு பொது வேட்பாளை நிறுத்தி தமிழ் மக்களுடைய விடயங்களை முன்னிறுத்தி அதற்கு ஆணை கோரும் சர்வஜன வாக்கெடுப்பாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். அதனை நாங்கள் மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். ஒரு முறைதான் செய்யலாம். அதனை ஒவ்வொரு முறையும் ஜனாதிபதி வேட்பாளராக தமிழர் ஒருவரை நியமித்து மக்களிடம் வாக்களிக்குமாறு கோர முடியாது.

கடந்த சில வாரங்களாக இது தொடர்பில் கருத்துத் தெரிவித்து வருபவர்கள் யாரென்று பார்த்தால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவர்கள்தான் இவ்வாறு தெரிவித்து வருகின்றனர். எல்லோரும் இணைந்து கோட்டால் தான் தமிழ் பொது வேட்பாளராகப் போட்டியிடத் தயாராக இருக்கின்றார் என்று முன்னாள் நீதியரசர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் கருத்துத் தெரிவித்திருந்ததைப் பார்க்ககூடியதாக இருந்தது.

விக்னேஸ்வரன் ஐயாவினுடைய கடந்த ஒன்றரை வருட காலச் செயற்பாடுகளை அவதானித்துப் பார்த்தால், 2022 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டபோது ஆதரவாக வாக்களித்தவர். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி நடத்திய சர்வகட்சி மாநாட்டின் போது இவருடைய கையிலும் ஜனாதிபதியுடைய கையிலும் பேசப்படப் போகின்ற விடயம் தொடர்பில் ஒரே ஆவணம் இருந்தது. இது அவர்கள் இருவருக்குமான நெருங்கிய உறவை வெளிப்படுத்துகின்றது. நாடாளுமன்ற வாக்கெடுப்புகளின் போதெல்லாம் ஒன்றில் கலந்துகொள்ளாமல் இருந்திருப்பார், இல்லாவிட்டால் ஆதரவாக வாக்களித்திருந்தார். ஒருபோதும் எதிராக வாக்களித்திருக்கவில்லை.

கடந்த வாரம் ஜனாதிபதி நடத்திய கூட்டத்தில், மக்களுடைய கோரிக்கைகள் எதனையும் ஜனாதிபதி நிறைவேற்றவில்லை என்ற காரணத்தால் கலந்துகொள்ளவில்லை என்று சி.வி.விக்னேஸ்வரன் ஐயா அறிவித்திருந்தார். இதன் மூலம் தான் ஜனாதிபதிக்கு எதிரானவர் என்பதனை மக்களுக்குக் காட்டுவதற்கு முற்படுகின்றாரா என்ற சந்தேகம் எழுகின்றது. இந்தப் பின்னணியில்தான் தமிழ் பொது வேட்பாளராக அழைத்தால் போட்டியிடத் தயார் என அவர் கூறியதைப் பார்க்க வேண்டியுள்ளது.

எதிர்வரும் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோர் அவரவர் கூட்டணி சார்பில் போட்டியிடப் போவதாகப் பகிரங்கமாக கூறியுள்ளார்கள். இவ்வாறான நிலையில் மீதமாக இருக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரமுன சார்பில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடும் நிலைதான் காணப்படுகின்றது.

தற்போதைய சூழ்நிலையில் பொதுஜன பெரமுன சார்பில் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க களமிறங்கினால் பெரும்பான்மை இன சிங்கள மக்களை ரணிலுக்கு வாக்களிக்குமாறு மஹிந்த ராஜபக்ஷ பகிரங்கமாகச் சொல்ல வேண்டும். அவ்வாறு மஹிந்த ராஜபக்ஷவின் நேரடி ஆதரவுடன் மொட்டுக் கட்சியின் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க வேட்பாளராகக் களமிறக்கப்பட்டால் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் ஆதரவு இல்லை என்பது உறுதியாகத் தெரியும். அதேபோன்று இலங்கையில் உள்ள தமிழ் பேசும் மக்களுடைய வாக்குகளும் அவருக்குக் கிடைப்பது சந்தேகமாகும்.

இவ்வாறான நிலையில் தமிழ் மக்களுடைய வாக்குகள் இன்னொரு வேட்பாளருக்குப் போகாமல் தடுக்கும் நோக்கில் தமிழ் பொது வேட்பாளர் விடயம் கையிலெடுக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் எழுகின்றது. தமிழ் பொது வேட்பாளர் கணிசமான தமிழ் வாக்குகளைப் பிரித்தால் பெரும்பான்மை இன சிங்கள வாக்காளர்களது வாக்குகள் மூன்றாக பிளவுபடும் நிலை ஏற்பட்டு அவர்களில் போட்டியிடும் நிலை ஏற்படும். இந்தப் பின்னணியில்தான் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் பேசுபொருளாக்கி நாடிபிடித்துப் பார்க்கும் தந்திரத்தை ரணில் விக்கிரமசிங்க அரங்கேற்றியிருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு எழுகின்றது.

தமிழ் பொது வேட்பாளரைத் துரும்புச்சீட்டாகப் பயன்படுத்த வேண்டும் என்று நான் கூறிய விடயம் இன்றைய சூழலில் பொருத்தப்பாடில்லாத நிலையே காணப்படுகின்றது. இன்று தமிழ் மக்களுடைய வாக்குகள்தான் அடுத்த ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானிக்கக் கூடிய இடத்தில் இருக்கின்றது. இந்தப் பின்னணியில் இருந்து தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் பேசுபவர்கள் குறித்து நாம் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்களது உள்நோக்கங்களைப் பார்க்க வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.