சாரதியைத் தாக்கி விட்டு ஓட்டோவை கொள்ளையடிக்க முற்பட்ட பெண் கைது.

ஓட்டோ ஒன்றை வாடகைக்கு அமர்த்தி, சாரதியைத் தாக்கிவிட்டு ஒட்டோவைக் கொள்ளையடிக்க முற்பட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

24 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயொருவரே கொடகவெல பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கொடகவெல , பல்லேபெத்த பகுதியில் ஓட்டோ பயணித்துக் கொண்டிருக்கையில், சாரதியின் கழுத்தை குறித்த பெண் நெரித்துள்ளார். அவரின் பிடிக்குள் இருந்து தப்பிக்க சாரதி முற்பட்டுள்ளார். இதன்போது கட்டுப்பாட்டை இழந்து ஓட்டோ வீதியில் கவிழ்ந்துள்ளது.

இதையடுத்து அப்பகுதியில் இருந்த மக்கள் சம்பவ இடத்துக்குச் சென்று அந்தப் பெண்ணை மடக்கிப் பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அந்த ஓட்டோவைக் கொள்ளையடிப்பதே தமது நோக்கம் எனவும், ஓட்டோவுக்குப் பின்னால் தனது கணவன் மோட்டார் சைக்கிளில் வந்தார் எனவும், ஓட்டோ விபத்துக்குள்ளானதும் கணவன் ஓடி விட்டார் எனவும் மேற்படி பெண் பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

சாரதி கொடகவெல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Leave A Reply

Your email address will not be published.