செங்கடலைப் பாதுகாப்பதற்கு இலங்கைக் கடற்படைக் கப்பலா? – முதலில் இந்திய இழுவைப் படகுகளைக் கட்டுப்படுத்துங்கள்.

“இந்திய இழுவைப் படகுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும் இலங்கை அரசு செங்கடலைப் பாதுகாக்க இலங்கைக் கடற்படைக் கப்பலை அனுப்புகின்றது” – என்று யாழ்ப்பாணம் மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புகளின் சம்மேளன செயலாளர் அன்ரன் செபராசா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அத்துமீறிய இந்திய இழுவைப் படகுகளால் கடல் வளங்கள் அழிக்கப்படுகின்றன. இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்தும் அழிக்கப்படுகின்றது. இந்திய இழுவைப் படகுகளைக் கட்டுப்படுத்த இரு நாட்டு அரசுகளும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்திய இழுவைப் படகுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும் இலங்கை அரசு செங்கடலைப் பாதுகாக்க இலங்கைக் கடற்படைக் கப்பலை அனுப்புகின்றது. இலங்கைக்குப் பொருட்கள் கொண்டுவரப்படும் கடலைப் பாதுகாக்க வேண்டியது முக்கியம்தான். எனினும், மக்களின் வாழ்வாதாரத்தையும் இலங்கை அரசு கவனத்தில் எடுக்க வேண்டும்.

இங்கிருக்கக் கூடிய மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி இந்தியத் துணைத் தூதரகம் நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர். இந்திய தூதரக அதிகாரிகள் எமது பிரச்சினைகளை இந்திய அரசிடம் எடுத்துச் சொல்லி இழுவைப் படகுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையேல் விரைவில் இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொள்வோம்.

இந்திய இழுவைப் படகுகள் மீனவர்களின் வலைகளை அழிக்கின்றன. இதனால் ஒருவேளை உணவுகூட இல்லாமல் மீனவர்கள் பலர் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களுக்குக் கடற்றொழில் அமைச்சர் அல்லது இலங்கை அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.