வாக்குறுதிகளை நிறைவேற்றினால் ரணில் அரசுக்கு ஆதரவு வழங்குவோம்! – இப்படிச் சம்பந்தன் கூறுகின்றார்.

“வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினால் ஜனாதிபதிக்கும், அரசுக்கும் ஆதரவு வழங்கத் தயார்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார் என்று சிங்கள ஊடகமான ‘திவயின’ செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில் சம்பந்தன் கூறியதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“கடந்த காலங்களில் நாட்டின் ஒவ்வொரு ஆட்சியாளர்களும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குவதற்காக தைப்பொங்கலையும், சிங்கள – தமிழ் புத்தாண்டையும் தெரிவு செய்திருந்தனர். எனினும், தமிழ் மக்களுக்கு எந்தவொரு தீர்வையும் பெற்றுக்கொடுக்கவில்லை.

இந்நிலையில், ஒவ்வொரு தைப்பொங்கலையும், தமிழ் – சிங்கள புத்தாண்டையும் தமிழ் மக்கள் மிகவும் எதிர்ப்பார்புடனேயே கடந்து சென்றுள்ளனர்.

இந்தத் தடவை தைப்பொங்கல் காலத்தில் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார். அதற்கு ஏற்ற முறையில் ஜனாதிபதி செயற்படுவார் என நம்புகின்றோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வடக்கு, கிழக்குப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்ற ஆசை அன்றிலிருந்து இருந்தது.

எனினும், அவரைச் சுற்றியிருந்தவர்கள் அதற்கு இடம் கொடுக்காமல் இழுத்தடித்தனர். அதனால் தமிழ் மக்களின் நம்பிக்கை ஏமாற்றத்தில் முடிவடைந்தது.

தென்னிலங்கையின் இனவாத அரசியலுக்கு மத்தியில் தமிழ் மக்களுக்கு சற்று நிவாரணம் வழங்குவது மிகவும் கடினமான விடயம் என்பதை அனைவரும் புரிந்துகொண்டுள்ளனர்.

ஆனால், தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். இது தொடர்பில் அனைவரும் சிந்திக்க வேண்டும்.” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.