இன்று பெலியத்தவில் கொல்லப்பட்ட சமன் பெரேராவின் பின்னணி என்ன? ஏன் கொல்லப்பட்டார்?

அத்துரலியின் ரத்தன தேரர் மற்றும் கலகொடஅத்தே ஞானசார தேரரும் நாட்டைக் காப்பாற்ற அரசியல் செய்யத் ஆரம்பித்த கட்சி,  அபே ஜன பல கட்சி (எங்கள் மக்கள் சக்தி கட்சி) எனத்தான் அனைவருக்கும் தெரியும்.

ஆனால் அந்தக் கட்சியின் தலைவராக இருந்தவர் சமன் பெரேரா. அபே ஜன பல கட்சி சமன் பெரேரா இன்று காலை பெலியத்தையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். அவரோடு வந்த மேலும் நால்வரும் சுட்டுக் , அதே இடத்தில் வைத்துக் கொல்லப்பட்டனர்.

கடந்த பொதுத் தேர்தலில் 67,758 வாக்குகளைப் பெற்று தேசியப்பட்டியல் ஆசனத்தில் வெற்றி பெற்ற அபே ஜன பலய கட்சியின் தலைவர் சமன் பெரேரா , சர்ச்சைக்குரிய ஒரு நபராவார். அவருக்கு எதிராக குற்றவியல் வரலாறு ஒன்று உள்ளமை தெரியவருகிறது.

இவர் தெற்கில் ராயல் பீச் சமன் என்று அழைக்கப்படுகிறார்.

2019 செப்டம்பரில், அவர் தெற்கில் பாதாள உலகத்துடன் தொடர்புடையவர் என்று அரச புலனாய்வு சேவை அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வ அறிக்கையை வழங்கியிருந்தது.

அப்படியிருந்த போதிலும் , கடந்த நவம்பர் 16, 2019 அன்று நடந்த ஜனாதிபதி தேர்தலில் எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தலைவராக போட்டியிட்டார்.

சமன் பெரேரா எப்படி கொல்லப்பட்டார்…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் கெப் வண்டியில் வந்த சிலர் இன்று (22) காலை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எமது ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட 05 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (22) காலை 8.30க்கும் 8.40க்கும் இடையில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. சமன் பெரேரா உள்ளிட்ட 05 பேர் வெள்ளை நிற டிஃபென்டர் காரில் வந்துள்ளதுடன், காலை உணவை சாப்பிடுவதற்காக டிஃபெண்டர் வாகனத்தை துப்பாக்ச் சூடு நடந்த இடத்தில் நிறுத்தியுள்ளனர்.

அப்போது, ​​பச்சை நிற கேப் வாகனம் ஒன்றில் வந்த சிலர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் சமன் பெரேரா உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த திரு.சமன் பெரேராவின் கொலைச் சம்பவம் தொடர்பில் தங்காலை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றில் பங்குபற்றுவதற்காக இவர்கள் வந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு T-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது, ​​தங்காலை பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.கீர்த்தி ரத்னவின் பணிப்புரையின் பிரகாரம் பெலியத்த பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ராயல் பீச் சமன்
சமன் பிரசன்ன பெரேரா தெற்கில் “ராயல் பீச் சமன்” என பிரபலமாக அறியப்பட்டார். தென்னிலங்கையில் பாதாள உலகத்துடன் தொடர்புடைய பல மரணங்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட இவர், தெற்கில் உள்ள பாதாள உலகக் குழுவான கொஸ்கொட சுஜி கும்பலினால் வெறுக்கப்பட்ட நபர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்துருவவில் உள்ள றோயல் பீச் ஹோட்டலின் உரிமையாளரான இவர், சுற்றுலா வழிகாட்டியாக பணிபுரிந்துள்ளார். றோயல் பீச் ஹோட்டலின் உரிமையாளரானதால் “ராயல் பீச் சமன்” என அழைக்கப்பட்டுள்ளார். இவர் ஒரு பணக்கார பெண் வைத்தியரை திருமணம் செய்தமையால் , அவர் பெரும் பணக்காரர் ஆகினார் என்று கூறப்படுகிறது.

அவர் மீதான கொலைக் குற்றச்சாட்டுகளில் பிரதானமானது பலபிட்டிய உள்ளுராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் ஸ்டான்லி தாப்ரு மற்றும் அவரது மகன் டெரி தாப்ரு ஆகியோரை சுட்டுக் கொன்றதில் அவர் ஒரு அங்கமாக இருந்தார் என்பதுதான்.

அதேபோல இந்துருவே சமன் கொலை சம்பந்தமாகவும் அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது. பாதாள உலகத் தலைவர் சுஜீ கொஸ்கொட கும்பலின் பிரதான எதிரியான இவர், சுற்றுலா மற்றும் சொத்துக்கள் தொடர்பான பிரச்சினைகளில் அடிக்கடி மோதிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக கதையொன்றை உருவாக்கிய நாமல் குமாரவுடன் கூட , இவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உளவாளியின் கொலை

சமன் பெரேரா தொடர்பான அண்மைய சர்ச்சைக்குரிய சம்பவம் என்னவென்றால், அவர் கொலை வழக்கு விசாரணை தொடர்பாக 2022 ஆகஸ்ட் 24 அன்று தங்காலை பகுதியில் வைத்து விசேட பொலிஸ் குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதேயாகும்.

கடந்த ஜூன் மாதம் 5ஆம் திகதி தங்காலை மொரகடியார மாவட்டத்தில் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக சாட்சியமளித்து படுகொலை செய்யப்பட்ட நபரின் கொலையுடன் தொடர்புடைய நபருக்கு , பொலிஸாரிடம் இருந்து தலைமறைவதற்காக சமன் பெரேரா அடைக்கலம் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

கடந்த ஜூன் மாதம் 19ஆம் திகதி தங்காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சமன் பெரேரா மீது பொலிஸாரின் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் அபே ஜனப கட்சியினூடாக பொதுத்தேர்தலில் போட்டியிட்டவர் என்பது தெரியவந்துள்ளது.

கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் அவரைத் தேடிச் சென்ற போது , அவர் குருநாகலிலுள்ள சமன் பெரேராவின் வீட்டில் பதுங்கியிருந்தமையும் தெரியவந்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் சமன் பெரேரா தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இந்த சம்பவம் தொடர்பாக கைதான அவர் , ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.

இதேவேளை, தம்மைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக கடந்த ஜூன் மாதம் பொலிஸ் மா அதிபரிடம் சமன் பெரேரா முறைப்பாடு செய்திருந்ததுடன், அரசியலில் ஈடுபட்டு வந்த நிலையில் தம்மிடம் இருந்து விலகியிருக்கும் பௌத்த பிக்கு ஒருவர், சமன் பெரேராவை கொலை செய்ய ஒரு பெண்ணுக்கு 50 இலட்சம் ரூபா கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவித்திருந்தார். .

இன்னும் செய்திகள் …..

 

மீண்டும் கூட்டமைப்பாக நாம் ஒன்றிணைவோம்! தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு சிறீதரன் பகிரங்க அழைப்பு.

தீர்வு விடயத்தில் வலியுறுத்தலை மட்டுமே எம்மால் வழங்க முடியும்! – தமிழ்க் கட்சிகளிடம் இந்தியத் தூதுவர் தெரிவிப்பு.

தமிழ் மக்களுக்காக உங்களை முழுமையாக அர்ப்பணியுங்கள் தன்னிடம் ஆசி பெற்ற சிறீதரனிடம் சம்பந்தன் எம்.பி. இப்படி தெரிவிப்பு.

அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை (புகைப்படங்கள்)

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ரான் டிசாண்டிஸ் வெளியேறினார்.

நாரம்மல சம்பவம் குறித்து அமைச்சர் திரன் அலஸ் கண்டனம்.

உயர்தரத்தை பூர்த்தி செய்யும் பாடசாலை மாணவர்களுக்கு புதிய திட்டம்.

அயோத்தி ராமா் கோயிலில் 84 வினாடி முகூா்த்த காலம்

சமன் பெரேரா பெலியத்தையில் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.

பெலியத்தவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.