யாழில் சுதந்திர தின எதிர்ப்புப் போராட்டங்களுக்குத் தடையுத்தரவு கோரும் மனு நிராகரிப்பு!

இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்துக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் எனக் கருதிய பொலிஸார், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவைப் பெற முயற்சித்த போதிலும் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸாரால் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சிலருக்குப் போராட்டம் நடத்தத் தடை விதிக்கக் கோரிய மனுவை யாழ். நீதிமன்ற பதில் நீதிவான் பா.தவபாலன் நேற்று நிராகரித்தார்.

பதில் நீதிவானின் உத்தியோகபூர்வ இல்லத்துக்குச் சென்ற பொலிஸார் தடையுத்தரவு கோரும் மனுவைச் சமர்பித்தபோதும், போராட்டம் நடத்துவதற்குப் பொதுமக்களுக்கு உரித்துண்டு எனவும், சுதந்திர தின நிகழ்வுகளுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் போராட்டங்களை நடத்த முடியும் எனவும் பதில் நீதிவான் தெரிவித்தார்.

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினம் நாடளாவிய ரீதியில் இன்று கொண்டாடப்படவுள்ள நிலையில் சுதந்திர தினத்தைக் கரி நாளாக வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளதுடன் யாழ்ப்பாணத்திலும் போராட்டங்கள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.