நாட்டை அதிரவைத்த பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்: மத்திய உள்துறை போட்ட அதிரடி உத்தரவு

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கை என்ஐஏ விசாரணைக்கு எடுத்துள்ளது.

கர்நாடக தலைநகர் பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி பகுதியில் ராமேஸ்வரம் கபே உணவகம் அமைந்து உள்ளது. பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ள இந்த உணவகம் எப்போதும் பரபரப்புடன் காணப்படும். வழக்கம்போல் மார்ச் 1 ஆம் தேதி மதியம் சுமார் 1 மணியளவில் அங்கு ஏராளமானோர் அங்கு அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது, அதி பயங்கர சத்தத்துடன் 2 முறை வெடிகுண்டுகள் வெடித்து சிதறின.

இதன் காரணமாக அந்த உணவகம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. ஓட்டல் கண்ணாடிகள், தரையில் இருந்த கிரானைட் கற்கள் உடைந்து சிதறின. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் பதறியடித்து வெளியே ஓடினர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெண், உணவக ஊழியர்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். காவல்துறை மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் உணவகத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் உணவகத்தின் கை கழுவும் பகுதியில் குண்டுகள் வெடித்து சிதறியது தெரியவந்தது. அங்கிருந்த ஒரு பையில் ஒரு அடையாள அட்டை, பேட்டரி, இரும்பு போல்டு ஆகியன இருந்தன. அவற்றை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மோப்ப நாய்கள், தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் இதுவரை 5 பேரை பிடித்து கர்நாடகா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். சம்பவம் நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கை என்ஐஏ விசாரணைக்கு எடுத்துள்ளது. கர்நாடகா போலீசார் விசாரித்து வந்த நிலையில், வழக்கு என்ஐஏ வசம் சென்றுள்ளது. அதன்படி, குண்டு வெடிப்பு தொடர்பாக இனி என்ஐஏ விசாரிக்கும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.