கொழும்பு கஜிமாவத்தையில் வீடற்ற அனைத்து குடும்பங்களுக்கும் வீடுகளை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

கொழும்பு கஜிமாவத்தையில் வசிக்கும் அனைத்து வீடற்ற குடும்பங்களுக்கும் வீடுகளை வழங்குவதற்கு தேவையான பணிகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் வீடமைப்புகளை வழங்குவதற்கான அளவுகோல்களுக்கு அமைவாகவே இப்பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கொழும்பு கஜிமா தோட்ட வீட்டுப் பிரச்சினை தொடர்பில் நேற்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

கொழும்பு மாநகரப் பகுதிக்குள் அரசாங்கத்திற்குச் சொந்தமான பயன்படுத்தப்படாத கட்டடங்கள் மற்றும் காணிகளை ஆராய்ந்து அந்த காணிகளை அபிவிருத்தி செய்து வர்த்தக நடவடிக்கைகளுக்கு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அரச துறையின் தலையீட்டுடன் தனியார் முதலீடுகள் ஊடாக இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அத்துடன், கொழும்பு நகர எல்லையில் தற்போது அமுல்படுத்தப்பட்டு வரும் அரசாங்க வீடமைப்புத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி, மேலும் வீடமைப்புத் திட்டங்களை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தை விளக்கியதுடன், தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையில் சிரமமானதாக இருந்தாலும் பொருத்தமான முறைமையை செய்வதற்கு தயாராக வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.