இந்தியன் ரோலர் படகுகளை உடன் தடுத்து நிறுத்துங்கள்! பதில் இல்லையேல் 25 இற்குப் பின்னர் தொடர் போராட்டம்!! – மீனவர் சங்கங்கள் எச்சரிக்கை; தூதரகத்திடம் மகஜரும் கையளிப்பு.

யாழ்ப்பாணம் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழையும் இந்தியன் ரோலர் படகுகளைத் தடுத்து நிறுத்துமாறு கோரி இன்று தீவகப் பகுதி தெற்கு வேணைப் பிரதேச கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தினர், யாழ். இந்தியத் துணைத் தூதரகத்திடம் மகஜர் கையளித்ததுடன் கண்டனப் போராட்டத்தையும் முன்னெடுத்தனர்.

அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“அத்துமீறிய இந்திய ரோலர் படகுகளால் தொடர்ச்சியாக எமது வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

அத்துமீறிய ரோலர் படகுகளைத் தடுத்து நிறுத்துமாறு இலங்கை மற்றும் இந்திய அரச உயர்மட்டம் வரை மகஜர்களைக் கையளித்தது மட்டுமல்லாது கண்டனப் போராட்டங்களையும் மேற்கொண்டோம்.

ஆனால், எமது கோரிக்கை தொடர்பில் இந்திய அரச உயர்மட்டம் இதுவரை சாதகமான பதில் எதுவும் வழங்கவில்லை.

ஆகவே, எமது கோரிக்கை அடங்கிய மகஜருக்கு நடவடிக்கை எடுக்குமாறு யாழ். இந்தியத் துணைத் தூதரகத்திடம் வழங்கியுள்ளோம்.

எமது மகஜருக்கான பதிலை இம் மாதம் 25 ஆம் திதிக்கு முன்னர் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ள நிலையில் வழங்காத சந்தர்ப்பத்தில் 25ஆம் திகதிக்கு பின்னர் மாபெரும் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம்.” – என்றுள்ளது.

குறித்த கண்டனப் போராட்டத்தில், “அடிக்காதே அடிக்காதே மீனவர் வயிற்றில் அடிக்காதே!”, “இந்திய அரசே தமிழக ரோலரைத் தடுத்து நிறுத்து!!”, “தொப்புள் கொடி உறவே நமது கடல் வளத்தை அழிக்காதே!!!” போன்ற வாசகங்களை ஏந்தியவாறு கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் தீவகம் தெற்கு கூட்டுறவு சமாசங்களின் தலைவர் ஆறுமுகம் கனகசபை, யாழ், மாவட்ட கிராமிய கடற்தொழிலாளர் கிராமிய கூட்டுறவு சங்கங்களின் தலைவர் செல்லத்துரை நற்குணம், யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் ஸ்ரீகந்தவேல் புனிதப்பிரகாஷ் மற்றும் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சமாசங்களின் உப தலைவர் அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ் ரட்ணகுமார் உட்பட மீனவர் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.