மருதங்கேணியில் படகு மோதி மாயமான மீனவர் சடலமாக மீட்பு.

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவரின் தெப்பம் மீது இனந்தெரியாத படகு மோதியதில் காணாமல்போன மீனவரின் சடலம் நேற்று மாலை கரையொதுங்கியுள்ளது.

மருதங்கேணியைச் சேர்ந்த முத்துச்சாமி தவராசா (வயது 61) என்பவர் 3 நாட்களுக்கு முன்னர் தெப்பத்தில் சென்று மீன்பிடியில் ஈடுபட்டிருந்தார். இதன்போது இனந்தெரியாத படகு ஒன்று தெப்பத்தை மோதியது என்று தெரிவிக்கப்பட்டது. இதில் தெப்பம் கரையொதுங்கியிருந்த நிலையில் மீனவர் காணாமல்போயிருந்தார்.

காணாமல்போன மீனவரைத் தேடும் பணியில் அப்பகுதி மக்களும் கடற்படை சுழியோடிகளும் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை சடலம் மருதங்கேணி கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது.

சடலத்தை கிளிநொச்சி நீதிமன்ற நீதிவான் ஜெமில் நேரில் சென்று பார்வையிட்டார்.

சடலத்தின் முகத்தில் காயங்கள் காணப்படுவதால் தடயவியல் பொலிஸாரை அழைத்து தடயங்கள் பெறப்பட்ட பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு நீதிவான் உத்தரவிட்டார்

இது தொடர்பில் மருதங்கேணிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.