இந்தியத் தூதரகத்தை திடீரென முற்றுகையிட்ட போராட்டக்காரர் பொலிஸார் அதிகளவு குவிப்பு தொடர்கின்றது உண்ணாவிரதம்.

யாழ்ப்பாணத்தில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டைக் கண்டித்து யாழ்ப்பாணம் மாவட்ட மீனவர்கள் இன்று காலை யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ். மாவட்ட மீனவர்கள் நான்கு பேர் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ். மாவட்ட கடற்றொழில் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து நேற்றுக் காலை முதல் யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்துக்கு முன்பாக உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், உணவு தவிர்ப்புப் போராட்டம் இடம்பெற்ற இடத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக இன்று காலை வருகை தந்த மாதகல் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் இணைந்து பேரணியாக யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் முன்பாகச் சென்று கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

போராட்டக்காரர்கள் திடீரெனத் தூதரகத்தை நோக்கிச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

சிறிது நேரப் போராட்டத்தின் பின்னர் மீனவர்கள் மீண்டும் உணவு தவிர்ப்புப் போராட்டம் இடம்பெற்ற இடத்துக்கு வருகை தந்து தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

திடீரென மீனவர்கள் யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தை நோக்கிச் சென்றதால் உடனடியாக அதிகமான பொலிஸார் வரவழைக்கப்பட்டு தூதரகத்தின் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், மீனவர்கள் தொடர்ந்தும் தமது உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற அதேநேரத்தில் அவர்களுக்கு ஆதரவாகப் பல்வேறு இடங்களிலும் இருந்து மீனவர்கள் வருகை தந்து ஆதரவை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.