கைதான 32 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில்….

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த 32 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் தமிழகத்தில் இருந்து வந்து நெடுந்தீவுக் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று படகுகளையும் அதிலிருந்து 25 மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்திருந்தனர்.

இதேபோன்று அத்துமீறி மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு விசைப்படகுகளையும் அதிலிருந்த ஏழு மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்திருந்தனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மொத்தமாக இந்திய மீனவர்கள் 32 பேர் 5 படகுகளுடன் சிறைப் பிடிக்கப்பட்டு மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய யாழ்ப்பாணம் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 25 மீனவர்களும் ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்தி அடுத்த மாதம் ஏப்ரல் 5 திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று மன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 7 மீனவர்களும் இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.