திருகோணமலை விபத்தில் மட்டக்களப்பு இளைஞன் சாவு!

திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பூநகர் பகுதியில் (21) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அதேவேளை, மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றைய நபர் படுகாயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பைச் சேர்ந்த மேற்படி இருவரும் மோட்டார் சைக்கிளில் திருகோணமலைக்கு வந்து மீண்டும் மட்டக்களப்பு நோக்கிப் பயணித்துள்ளார்கள். இதன்போது மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மின்கம்பத்துடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து சம்பவத்தில் மட்டக்களப்பு – செங்கலடி, கணபதிப்பிள்ளை நகரைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் மதுசாந் (வயது 22) என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் .

Leave A Reply

Your email address will not be published.