சில அரசியல்வாதிகள் தமது அரசியல் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும்போது நான் நாட்டைப் பற்றியே சிந்தித்தேன் என்று ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு.

புதிய மறுசீரமைப்புக்களின் ஊடாக மாத்திரமே பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்றும், கடந்த காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைப் போல எதிர்காலத்தில் ஏற்படாதிருப்பதை உறுதி செய்யும் அரசின் வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.

ஏனைய அரசியல்வாதிகள் பொறுப்பேற்கத் தயங்கிய நாட்டையே தான் பொறுப்பேற்றதாகத் தெரிவித்த ஜனாதிபதி, சிலர் தமது அரசியல் எதிர்காலம் பற்றி மட்டுமே சிந்தித்த போதும், தான் நாட்டின் எதிர்காலத்தைப் பற்றியே சிந்தித்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

பொலனறுவையில் நேற்று நடைபெற்ற “யுனைடட் யூத் இளைஞர் ஒன்றியம்” உடனான சிநேகபூர்வ கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி தெரிவித்தார்.

“ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்” என்ற இச்சந்திப்பில் நாட்டின் எதிர்காலம் மற்றும் தூரநோக்குக் குறித்து இளைஞர்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி, இளையோரின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசு மேற்கொண்டு வரும் புதிய பொருளாதார சீர்திருத்தங்களின் பிரதிபலன்கள் இன்னும் சில வருடங்களில் மக்களுக்கு கிடைக்கும் என்றும், எனவே, தங்களினதும் நாட்டினதும் எதிர்காலத்துக்கான சிறந்த வழி எதுவென்பதை நாட்டின் இளைஞர்கள் தீர்மானிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,

“சரிவடைந்திருந்த நாட்டையே நான் பொறுப்பேற்றேன். அவ்வாறான நிலையில் அரசியல்வாதிகள் நாட்டைப் பொறுப்பேற்கத் தயங்கினர். நான் பொறுப்பேற்காவிட்டால் நாட்டின் நிலைமை என்னவாகும் என்பதை சிந்தித்தேன். அந்த நேரத்தில் நாட்டை பொறுப்பேற்றால் அரசியல் நலன்களை இழக்க நேரிடுமென பலரும் நினைத்தனர். அவர்கள் தங்களைப் பற்றி மட்டும் சிந்தித்தனர். நான் நாட்டை பொறுப்பேற்காவிடின் எமக்கான நாடொன்று எஞ்சியிருக்குமா என்பதையே நான் சிந்தித்தேன்.

நாடாளுமன்றத்தில் தனியொரு ஆசனம் மட்டுமே இருந்தது. எனக்கு இருந்த ஒரே பிரச்சினை அதுவாகவே இருந்தது. அதற்கு முன்னதாக நான் டிசம்பர் மாதமளவில் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருடன் கலந்துரையாடியிருந்தேன். உலக வங்கியுடனும் கலந்தாலோசித்தேன்.

அதுபற்றி முன்னாள் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தி வேலைத்திட்டத்தை நடைமுறைப் படுத்துமாறு கூறினேன். அத்துடன் கடந்த தேர்தல் சமயத்தில் நாட்டில் பணமில்லை என்பதை ஐ.தே.க. அறவித்தது. குறைந்தபட்சம் 300 கோடி டொலர்களையாவது கையிருப்பில் வைத்திருக்க வேண்டியது அவசியம் எனக் கூறியது. அப்போது மக்கள் எமக்கு வாக்களிக்கவில்லை. ஆனால், 2021 ஆம் ஆண்டில் நாம் கூறியவை உண்மையாக நிகழ்ந்தன.

அத்தகைய நிலையில் நான் நாட்டைக் பொறுப்பேற்றேன். நான் நாட்டைக் பொறுப்பேற்றுக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? நாட்டின் பொருளாதாரம் முழுமையாக முடங்கிப் போயிருக்கும். சரிவடைந்த பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை நாடினோம். தற்போது சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுகள் வெற்றியடைந்துள்ள நிலையில், எமக்குக் கடன் வழங்கிய நாடுகளுடன் பேச்சுகளை ஆரம்பித்துள்ளோம்.

இந்தக் கலந்துரையாடல்களின் பின்னர் எமது நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு அந்த நாடுகளின் உதவிகள் கிட்டும். அதனால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடாது. நாம் இன்னும் இறக்குமதி சார்ந்த பொருளாதாரத்தையே கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு வருடத்திலும் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாகக் காணப்படுகின்றது. அந்த இடைவௌியைச் சரிசெய்ய மீண்டும் கடன்களைப் பெறுகின்றோம். இந்நிலை தொடர்ந்தால் இன்னும் 10 வருடங்களில் மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிவிடுவோம்.

நீங்கள் 27 வயது இளைஞராக இருந்தால் உங்களுக்கு 37 வயதாகும்போது மீண்டும் இதே போன்ற பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நீங்கள் தயாரா என்று கேட்க விரும்புகின்றேன். எரிபொருள் கொள்வனவு செய்ய பணம் இல்லாத, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த நாட்டை ஏற்க அன்று யாராவது இருந்தார்களா? இந்தப் பொருளாதார நெருக்கடியை அடுத்த தலைமுறைக்கும் கொண்டுச் செல்லாமல் இருப்பது அனைவரினதும் பொறுப்பாகும். அதற்காக அர்ப்பணிக்க வேண்டும். விரைவில் நாம் பொருளாதார மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும். இறக்குமதி சார்ந்த பொருளாதாரத்தில் இருந்து ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்துக்கு நாம் செல்ல வேண்டும்.

அதற்கு நகரங்களில் மாத்திரமின்றி கிராமங்களினதும் பொருளாதாரத்தைப் பலப்படுத்த வேண்டும். வரவு – செலவுத் திட்டத்தைச் சரியாக வரையறுக்க வேண்டும். அரசின் திட்டங்கள் சரியாகச் செயற்படுத்தப்பட்டால் 2035 ஆம் ஆண்டுக்குள் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை நோக்கி நகர முடியும். அதன் பின்னர் துரித பொருளாதார அபிவிருத்தியை எட்ட முடியும்.

அத்துடன் வருடாந்தம் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 25 – 50 இலட்சம் வரையில் அதிகரிக்க வேண்டும். மேலும், அதிக பணம் செலவிடும் சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு அழைத்து வர வேண்டும்.

மேலும், விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம் கிராமங்களைப் பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அதனூடாக விவசாய ஏற்றுமதி இலக்குகளை விரைவில் அடையலாம். இதன் போது புதிய பயிர்களை விளைவிப்பது தொடர்பில் நாம் கவனம் செலுத்தியிருப்பதோடு, தூரியன் உற்பத்தி குறித்து தாய்லாந்து அரசுடன் கலந்துரையாடிள்ளோம். மேலும், இந்நாட்டில் பயிர் உற்பத்தித் திறனை அதிகரிப்பதன் மூலம் கிராமிய பொருளாதாரத்தைப் பலப்படுத்த முடியும்.

சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரத்திற்கான சாத்தியக்கூறுகள் நாட்டில் அதிகமாக உள்ளன. அதனால் காற்றாலை மற்றும் அனல் மின்சாரத்திற்கான வலுசக்தி உற்பத்தியில் தன்னிறைவை ஏற்படுத்தி, தேவைக்கு அதிகமான மின்சாரத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்ய முடியும். அத்துடன் இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையில் முதலீட்டு வலயத்தை உருவாக்க ஆயிரம் ஏக்கர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், மகாவலி ஏ – பீ வலயங்களை அபிவிருத்தி செய்து நவீன விவசாயத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்.

பிங்கிரிய மற்றும் வடக்கில் புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு அதற்குத் தேவையான காணிகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வேலைத்திட்டங்கள் அடுத்த 05 வருடங்களில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

உங்கள் எதிர்காலத்திற்காகவே இதையெல்லாம் செய்கிறேன். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக என்றுதான் சொல்ல வேண்டும்.

மேலும், ஹிங்குரக்கொட பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்து வருவதோடு இந்த வருடம் ஹிங்குரக்கொட விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அதன் மூலம் இந்தப் பிரதேசத்துக்கு உள்ளக விமான சேவைகள் கிடைக்கும்.

மேலும், பொலனறுவை வரலாற்று முக்கியமான நகரத்தை சுற்றுலாப் பயணிகளுக்காக இரவும் பகலும் திறந்துவிடலாம். நமது கலாசார அழகுகளையும் நவீன நடனங்கள் மற்றும் உள்ளூர் உணவு மற்றும் பானங்களுடன் இணைத்து சுற்றுலாத் திட்டங்களைத் தயாரிக்க முடியும். இந்தச் செயற்பாடுகள் அனைத்தையும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

எனவே, நாடு எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை இளைஞர்கள் தீர்மானிக்க வேண்டும். உங்கள் எதிர்காலத்தை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். உங்கள் எதிர்காலம் தொடர்பில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.” – என்றார்.

ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, முன்னாள் பிரதி அமைச்சர் சந்திரசிறி சூரியராச்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மின்னேரியா தொகுதி அமைப்பாளர் ஜகத் சமரவிக்ரம, யுனைடட் யூத் ஆலோசனை சபையின் தலைவர் சுதத் சந்திரசேகர, அதன் பணிப்பாளர் நாயகம் பிரசாத் அசங்க ரத்நாயக்க, தேசிய அமைப்பாளர் விஜித் அநுராத மற்றும் பொலனறுவை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவிலான இளைஞர், யுவதிகள் இந்தக் கலந்துரையாடலில் இணைந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.