விஜயகாந்த் மகன் எனக்கும் மகன் போலத்தான்: ராதிகா சரத்குமார்

மக்களவைத் தேர்தல் களம் களைகட்டியுள்ள சூழலில் திங்கட்கிழமை (மார்ச் 25) தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளும் விறுவிறுப்பாக வேட்புமனு தாக்கலில் ஈடுபட்டுள்ளன.

அந்த வகையில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் திங்கட்கிழமை திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூர், அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கவுசிக் ஆகியோர் தொடர்ச்சியாக வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேட்பு மனு தாக்கல் செய்தபோது வேட்பாளர்கள் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர். விருதுநகரில் திங்கட்கிழமை அடுத்தடுத்து வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய வந்ததால் ஆட்சியர் அலுவலகம் பரபரப்பானது.

தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத் குமாரும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொண்டு நலம் விசாரித்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். அதேபோல் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் நடிகர் சரத்குமாரும் கைகுலுக்கி பேசிக்கொண்டனர். ராதிகாவுக்கு மாற்று வேட்பாளராக சரத்குமாரும் மனு தாக்கல் செய்தார்.

அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ராதிகா சரத்குமார், “விருதுநகர் தொகுதி நாங்கள் கேட்டு கொடுக்கப்பட்டதில்லை. பாஜக தலைமை போட்டியிடச் சொன்னது. இந்தத் தொகுதி எங்களுக்குப் புதிதன்று. ஏற்கெனவே பலமுறை பரப்புரைக்காக இங்கு வந்துள்ளோம்.

“தேமுதிக வேட்பாளர் என் மகளுடன் படித்தவர், எனக்கும் மகன் போன்றவர். அவர் நலமுடன் இருக்க வேண்டும். வேறெதுவும் சொல்ல விரும்பவில்லை.

“காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தொகுதிக்கு வந்து மக்களைச் சந்தித்தது இல்லை என்ற புகார் உள்ளது,” என்று சொன்னார்.

இந்நிலையில், “இந்தத் தேர்தல் மிக முக்கியமான தேர்தல். இது இந்தியாவின் ஜனநாயகத்தைக் காப்பாற்றும் தேர்தல்,” என்று செய்தியாளர்களிடம் கூறினார் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூர்.

“இந்தியா ஒரு பாசிச சக்தியின் கைகளில் சிக்காமல் தடுத்து நிறுத்துவதற்கான கடைசி வாய்ப்பு. 50 நாட்களுக்குள் 2 மாநில முதல்வர்களை மத்திய அரசு அதன் அமைப்புகள் மூலம் கைது செய்துள்ளது. இந்த அரசை இப்போது வீழ்த்தாவிட்டால். 2029ல் ரஷ்யாவில் அமைந்த புட்டின் ஆட்சி முறை போன்ற ஆட்சி இங்கே வரும்.

“இந்தியா முழுவதும் அமலாக்கத் துறையின் சட்டவிரோத கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன. முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரசின் அனைத்து நிதி ஆதாரங்களும் வருமான வரித் துறையால் முடக்கப்பட்டிருக்கிறது. மத்திய அமைப்புகளை தனக்கு ஆதாயம் தரும் வகையில் மத்திய அரசு பயன்படுத்திக் கொள்கிறது. இந்த அரசு வீழ்த்தப்பட வேண்டும்.

“விருதுநகருக்கான திட்டங்கள் எல்லாம் காகிதத்தில்தான் இருக்கின்றன. விருதுநகரை பாஜக மோடி அரசு தொடர்ந்து வஞ்சிக்கிறது. ஆனால், இண்டியா கூட்டணி ஆட்சி விருதுநகருக்கு தீர்வுகளைக் கொண்டுவரும்,” என்றார் மாணிக்கம் தாக்கூர்.

விருதுநகர் தொகுதியில் திரைப்பிரபலங்கள் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, “மக்களாட்சியில் அனைவருக்கும் பங்கு உண்டு. அதனால் திரைத்துறையினரும் நிற்கலாம். ஆனால், தேர்தலில் கொள்கைகளை, வாக்குறுதிகளைக் கூறியே வாக்கு சேகரிக்க முடியும், ஒருவரின் தொழிலை வைத்து அல்ல,” என்று அவர் பதிலளித்தார்.

மேலதிக செய்திகள்
பேஸ்புக் மூலம் அறிமுகமான 14 வயது மாணவி, நான்கு நபர்களால் பலாத்காரம்

Leave A Reply

Your email address will not be published.