யாழிலும் கோர விபத்து! விவசாயி ஒருவர் சாவு!!

யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவன் பகுதியில்  (27) மதியம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உரும்பிராய் – புன்னாலைக்கட்டுவன் சந்தியில் சிறிய ரக உழவு இயந்திரத்தில் தோட்டத்தில் இருந்து புற்களை ஏற்றுக்கொண்டிருந்த விவசாயி மீது லொறி மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

பலாலியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த லொறி வேகக்கட்டுப்பாட்டை இழந்ததில் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின்போது லொறியில் பயணம் செய்த சாரதி உட்பட மூவர் மது போதையில் இருந்தனர் என்றும், இதனால் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக உழவு இயந்திரத்துடன் நிலைதடுமாறி மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது என்றும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்போது வீதியில் இருந்த மின்கம்பம், தொலைத்தொடர்பு கம்பம் என்பன முற்றாக உடைந்து சேதமடைந்துள்ளதுடன் பாரிய மரம் ஒன்றும் முறிந்து விழுந்துள்ளது.

சம்பவத்தில் ஈவினை கிழக்கு புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த சீனியர் இராஜன் (வயது 65) என்பவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

விபத்துச் சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.