பசுத்தோல் போர்த்திய நரியே வேலுகுமார்! – இ.தொ.கா. பதிலடி.

இதுவரை தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பைசா கூட சம்பளம் பெற்றுக் கொடுக்காமல் சந்தா மாத்திரம் பெற்றுக்கொண்டு இருக்கின்ற ஜனநாயக மக்கள் முன்னணி கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் சம்பள உயர்வை பற்றி விமர்சிப்பது என்பது பசுத்தோல் போர்த்திய நரி போல் உள்ளது என்று முன்னாள் அமைச்சரும் இ.தொ.காவின் போசகருமான ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“தொழிலாளர்களுக்குச் சம்பளம் வழங்கக்கூடாது என்று சம்பளப் பேச்சுக்குச் செல்லாத கம்பனிகளை விமர்சனம் செய்யாமல், இ.தொ.கா. சம்பளப் பேச்சுக்குச் செல்லாதது போல் இ.தொ.காவை விமர்சிப்பது என்பது இவர் ஒரு மனநோயாளி போல் காணக்கூடியதாக உள்ளது.

வேலுகுமார் அரசியலுக்கு வந்து கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாகியுள்ளது. ஒரு தொழிற்சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இவர் தோட்டத் தொழிலாளர்களுக்காக இதுவரை 10 பைசா கூட சம்பள உயர்வு பெற்றுக்கொடுத்தது இல்லை என்பதை நினைக்கும்போது இவருக்கு வாக்களித்த மக்களை எண்ணி வேதனை அடைகின்றேன்.

2015 முதல் 2019 வரை வேலுகுமார் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும், அரசில் எந்த அமைச்சு பதவிகளும் வேலுகுமாருக்கு வழங்கப்படவில்லை. எதிர்க்கட்சியில் இருந்தபோது அமைச்சுப் பதவிக்கு ஆசைப்பட்டு தனது கட்சியின் கொள்கையை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்தும் அவருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லை. அவருடைய தகுதி ஆராயப்பட்டே அவருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவில்லை என்பதை இந்நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

வேலுகுமார் பல முறை ஜானதிபதியை இரகசியமாகச் சந்தித்து , தனது ஆசையை நிறைவேற்ற முயற்சித்த போதிலும் அது பயனளிக்கவில்லை என்பதால், இ.தொ.கா. அரசில் பதவி வகிப்பதைக் கண்டு மன விரக்தியில் குழப்பிக் கொண்டிருக்கின்றார்.

தோட்டத் தொழிலாளர்களிடம் சந்தாவைப் பெற்றுக் கொண்டு, 10 பைசா கூட சம்பள உயர்வு பெற்றுக் கொடுக்காத கட்சிதான் வேலுகுமார் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயக மக்கள் முன்னணி. இதை மூடி மறைத்து விட்டு அன்று முதல் இன்று வரை இ.தொ. கா.பெற்றுக்கொடுத்த சம்பளத்தில் அவர் சந்தா பெற்றுக்கொள்கின்றார்.

இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானின் முயற்சியால் பல தொழிற்சங்கப் பிரச்சினைகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட்டுள்ளன. அதேபோல் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானின் தொடர்ச்சியான சம்பள உயர்வு தொடர்பான ஊடக சந்திப்புகளின்போது, தோட்டத் தொழிலாளர்களுக்கு விரைவில் நியாமான சம்பள உயர்வு கிடைக்கும் எனவும், அதற்கான முழுப் பொறுப்பையும் தான் ஏற்றுக்கொள்வதாகவும், அதற்கான அனைத்து வேலைத்திட்டத்தை அன்று முதல் இன்று வரை அவர் செய்து வருகிறார்.

மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் தலைமையிலான சம்பளப் பேச்சுகளின் போது அவருடைய பின்புலத்தில் இருந்த உயர்மட்ட குழுவில் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளர் இராமேஸ்வரன் ஆகியோரும் அங்கம் வகித்தனர். ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்குப் பிறகு அதே நிதானத்துடன் செயற்படுவதோடு சம்பளம் பெற்றுக்கொடுப்பதில் பின்வாங்காமல் செயற்படுகின்றார். அவருடைய அரசியல் அனுபவத்தின் ஊடாக தோட்டத் தொழிலாளர்களுக்கு விரைவாக சம்பளம் பெற்றுகொடுப்பர் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

இ.தொ.கா. பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் அவர்கள் சம்பளம் அதிகரிக்க வேண்டும் என்பதில் தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருகின்றார். சம்பள நிர்ணய சபை கூடும் திகதியை அடிப்படையாக வைத்து 30 நாட்களுக்குள் சம்பள உயர்வை பெற்றுக் கொடுத்து விடலாம் என்ற நம்பிக்கையில் சம்பள உயர்வு பெற்றுத் தரப்படும் எனத் தெரிவித்திருந்தார். தற்போது அது 10 அல்லது 20 நாட்களுக்கு தள்ளிப்போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்தது ஒன்றும் உலக மகா குற்றம் கிடையாது.

அவ்வாறு இருக்கும் நிலையில், கடந்த காலங்களில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 சம்பளம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என இ.தொ.கா. எதிர்க்கட்சியில் இருந்து போராடிக் கொண்டிருக்கும்போது, வேலுகுமார் ஆளும் கட்சியில் 5 வருடம் இருந்து 10 பைசா கூட சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கவில்லை என்பது ஊர் அறிந்த உண்மை.

நான் மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோருடன் பல கூட்டு ஒப்பந்தத்தில், சம்பளப் பேச்சில் கலந்துகொண்டுள்ளேன். இ.தொ.கா. ஒவ்வொரு சம்பளப் பேச்சின் போதும் கடுமையான வாக்குவாதம், போராட்டம் செய்தே சம்பள உயர்வு பெற்றுக்கொடுத்துள்ளது.

இ.தொ.காவைப் பொறுத்த மட்டில் ஆறுமுகன் தொண்டமான் மறைந்த போதிலும் அவர் முன்வைத்த 1000 ரூபாவை இ.தொ.கா. பெற்றுகொடுத்தது. அதேபோல் தற்போது இ.தொ.கா. முன்வைத்த கோரிக்கையை இ.தொ.கா. பெற்றுக்கொடுக்கும்.

வேலுகுமார் பெருந்தோட்டக் கம்பனிகளின் தரகராகச் செய்ற்பட்டு, அதிக சம்பளம் தராத கம்பனிகளின் மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பை இ.தொ.கா. மீது திசை திருப்ப முயற்சிக்கின்றார். வேலுகுமார், கம்பனிகளுக்கு எதிராக எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. இதன்மூலம் இவர் கம்பனிகளின் கைகூலியாகச் செயற்படுவதை அவருடைய அறிக்கையில் வெட்டவெளிச்சமாக காண முடிகின்றது.

கம்பனிகளுக்கு மறைமுகமாக கைக்கூலி வேலைப்பார்த்து கொண்டிருக்கும் வேலுகுமாருக்கு இந்தப் பதில் போதுமானது என நினைக்கின்றேன். பசுத்தோல் போர்த்திய நரியான 10 பைசா வேலுகுமார் தன்னை நியாயமானவராக இனி வரும் காலநகளில் வெளிக்காட்டக் கம்பனிக்கு எதிராக இனி அறிக்கை வெளியிடுவார்.

வேலுகுமாரின் போலி நாடகம் இனி அரங்கேராது எனத் தெரிவித்துள்ளதோடு, என்னுடைய அரசியல் அனுபவத்தில் பாதியே வேலுகுமாரின் வயது. இவரைப் போல் பல கம்பனிகளின் கைகூலிகளை எனது வாழ்நாளில் சந்தித்துள்ளேன். வெறும் செயல் இன்றி வாயாலே தனது வாழ்க்கையை அவர்கள் ஓட்டிவிடுவார்கள்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.