சு.கவின் அதிகாரம் தற்போது யார் வசம்? – 18 ஆம் திகதி கூடுகின்றது தேர்தல் ஆணைக்குழு.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரம் தற்போது யார் வசம் உள்ளது என்பது தொடர்பில் ஆராய்வதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும்18 ஆம் திகதி கூடவுள்ளது எனத் தெரியவருகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகச் செயற்படுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குழுவொன்று நிர்வாக சபைக் கூட்டத்தைக் கூட்டி பதில் தலைவர், பதில் செயலாளர், தேசிய அமைப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமித்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் பதில் தலைவராக நிமல் சிறிபால டி சில்வா தெரிவு செய்யப்பட்டார். மேற்படி கூட்டத்தில் கட்சியின் போஷகரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரும் பங்கேற்றிருந்தார்.

இதன்போது எடுக்கப்பட்ட முடிவுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடமும் கையளிக்கப்பட்டது. எனினும், இந்த நியமனம் சட்டவிரோதம் என மைத்திரி தரப்பு விளக்கமளித்துள்ளது.

இந்நிலையிலேயே கட்சி யாப்பின் அடிப்படையில் புதிய நியமனம் செல்லுபடியாகுமா, தேர்தல்கள் ஆணைக்குழு எந்தத் தரப்புடன் அதிகாரபூர்வமாகத் தொடர்புகொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயத் தேர்தல்கள் ஆணைக்குழு கூடவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.