குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை, மோட்டார் சைக்கிள் கொள்ளை.

வவுனியா நகரில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை வழிமறித்துக் குழந்தை மீது கத்தியை வைத்துத் தாயாரை மிரட்டி நகைகள் பறித்த கொள்ளையர்கள், அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.

மேற்படி சம்பவம் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிமனை முன்பாகவுள்ள கடவுச்சீட்டு அலுவலகத்துக்குச் செல்லும் வீதியில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா கடவுச்சீட்டு காரியாலத்துக்கு முன்பாக விண்ணப்பப்படிவம் நிரப்பும் தொழிலில் ஈடுபட்டு வரும் பெண்மணி, தனது தொழில் நிமித்தம் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிமனை முன்பாகவுள்ள கடவுச்சீட்டு அலுவலகத்துக்குச் செல்லும் வீதியில் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் தனது குழந்தையுடன் பயணித்த சமயத்தில் வீதியில் மறைந்து நின்ற முகமூடியணித்த மூவர், குறித்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர்கள் அணிந்திருந்த நகைகளை அபரித்தமையுடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் அபகரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் உடனடியாக வவுனியா பொலிஸ் நிலையத்துக்கு வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம் வவுனியா பொலிஸ் நிலையக் குற்றத் தடுப்புப் பிரிவினர் திவீர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.