பெண்ணுக்குப் போதை ஊசி செலுத்தி 10 பேர் கொண்ட கும்பல் வன்புணர்வு! – யாழில் கொடூரம்.

தனக்குப் போதை ஊசி செலுத்தி 10 பேர் வரையான கும்பல் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியது. அத்துடன், தன்னைச் சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கியது என்று 34 வயதான பெண் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

நல்லூரை அண்மித்த பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணே இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது:-

மேற்படிப் பெண் மனநல பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர். இவரின், பெற்றோர் மரணமானதையடுத்து தனது மூத்த சகோதரியுடன் வடமராட்சியிலுள்ள காப்பகம் ஒன்றில் நீதிமன்ற உத்தரவின்படி தங்கவைக்கப்பட்டிருந்தார்.

இவரின் மூத்த சகோதரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உயிரிழந்தார். இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் பெண்ணின் சகோதரன் அவரை நல்லூரை அண்மித்த பிரதேசத்தில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றிருந்தார்.

சகோதரனின் வீட்டில் வைத்தே தனக்கு இந்தக் கொடுமை இழைக்கப்பட்டது எனவும், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் 10 வரையான ஆண்கள் தனக்குப் போதை ஊசி செலுத்தி, சித்திரவதைகள் செய்து வன்புணர்வுக்கு உள்ளாக்கினர் என்றும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

அவரின் உடலில் சிகரெட்களால் சுடப்பட்ட அடையாளங்கள், தாக்கப்பட்டதற்கான தளும்புகள், தாக்கப்பட்டு கை முறிந்ததற்கான அடையாளமும் பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண், வடமராட்சியில் அவர் தங்கியிருந்த பாதுகாப்பு இல்லத்துக்குச் சென்ற பின்னர், அங்கு தனக்கு நேர்ந்த கொடுமைகளைக் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை நடத்தினர். சம்பவம் நடந்த இடம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்டது என்பதால் விசாரணைகளை அவர்களிடம் ஒப்படைத்தனர்.

இதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குச் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

மேலும், இந்த வாக்குமூலத்தில் பாதிக்கப்பட்ட பெண் தன்னை வன்புணர்வுக்கு உட்படுத்திய 10 பேரின் விவரங்களை வழங்கியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.