முஸ்லிம், சிங்களவர்களும் நாளைய ஹர்த்தாலுக்கு பேராதரவு தாருங்கள்- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

முஸ்லிம், சிங்களவர்களும் நாளைய

ஹர்த்தாலுக்கு பேராதரவு தாருங்கள்

– தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு

“முஸ்லிம் மக்களும் முற்போக்குச் சக்திகளாக நீதியின்பால் செயற்படுகின்ற சிங்களவர்களும் நாளை வடக்கு – கிழக்கு முழுமையிலும் நடைபெறவுள்ள ஹர்த்தால் போராட்டத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.”

– இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சட்டவிரோத தடைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்ற வகையிலேயே நேற்று சாவகச்சேரி சிவன் கோவிலடியில் முழு நேர உண்ணாவிரதப் போராட்டத்தைத் தமிழ்த் தேசியக் கட்சிகள் சார்பில் ஒன்றிணைந்து முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதேபோல் நாளை திங்கட்கிழமை தமிழர் தாயகத்திலே முழுமையான ஹர்த்தால் போராட்டத்தை முன்னெடுப்பதற்குத் தமிழ்த் தேசியக் கட்சிகளின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்காகவே மத்திய குழு இன்று காலையில் அவசரமாகக் கூடி குறித்த போராட்டத்துக்கு எமது கட்சியின் முழுமையான ஆதரவை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மாவட்ட செயற்பாட்டாளர்கள் ஊடாகவும் தொடர்புகொண்டு போராட்டத்தை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம்.

முஸ்லிம் மக்களும் முற்போக்குச் சக்திகளாக நீதியின்பால் செயற்படுபடுகின்ற சிங்களவர்களும் நாளை வடக்கு – கிழக்கு முழுமையிலும் நடைபெறவுள்ள ஹர்த்தால் போராட்டத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.