தமிழ் மக்களை உசுப்பேத்தி எதுவும் செய்ய முடியாது! பொது வேட்பாளர் விடயம் விரைவில் முடங்கிப் போகும்!! – அடித்துக் கூறுகின்றார் சீ.வீ.கே.

“ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் யார் என்ற தெரிவிலேயே இந்த விடயம் முடங்கும். உசுப்பேத்தி எங்கள் மக்களை எதுவும் செய்ய முடியாது.”

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“நான் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு மாறானவன். பொது வேட்பாளர் தேவையற்றது என அரசியல்வாதிகளுக்குள்ளேயே முதன் முதலில் எங்கட தரப்பில் இருந்து சொன்னவரும் நான்தான்.

அதாவது தமிழ்ப் பொது வேட்பாளர் சாத்தியமில்லை என்றும், அதற்கான காரணங்களையும் நான் கூறியிருக்கின்றேன். இப்பவும் சொல்கின்றேன் தமிழ்ப் பொது வேட்பாளர் யார் என்ற தெரிவிலேயே இந்த விடயம் முடங்கிப் போகும்.

கடந்த கால தேர்தல்களில் நாங்கள் நிரூபித்து வந்த மக்கள் ஆணை மலினப்படுத்தப்படும் என்ற கருத்தையும் கூறிக்கொள்கின்றேன். அதாவது கடந்த தேர்தலில் தேசியத்துக்கு விழுந்த வாக்கை எடுத்துப் பார்த்தால் அது புரியும். இப்ப மேலும் நாங்கள் பிளவுபட்டு இருக்கின்றபோது என்ன நடக்கும் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியம்.

ஆனால், ரணில் விக்கிரமசிங்கவை ஐனாதிபதியாக்குவதற்குத்தான் இவர்கள் தமிழ்ப் பொது வேட்பாளரை முன்வைத்தார்கள் என்ற அந்தக் கருத்தில் நான் உடன்படவில்லை. இந்தத் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை முதலில் பேசியது சுரேஷ் பிரேமச்சந்திரன்தான். அது அவரது நியாயமான கருத்து. அதனை நான் பிழை என்று சொல்லவில்லை. எனினும், அதில் நான் உடன்படவே இல்லை.

எங்களுடைய தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் கட்சி ரீதியாக இதுவரையில் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. ஆனாலும், கட்சி உறுப்பினர்கள் தனித்தனியே இது பற்றி பேசி வருகின்றார்கள். இந்த விடயம் தொடர்பில் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கட்சியின் மத்திய செயற்குழுவில் நாங்கள் பேசியிருந்தோம்.

இந்த விடயத்தில் கட்சிக்குள்ளும் இரண்டு கருத்துக்கள் இருந்தன. அப்படி தொடர்ந்தும் இருக்கும். இல்லாமலும் போகலாம். எனினும், சில நேரத்தில் நீயும் சொல்லு, நானும் சொல்லுறேன் என்றவாறாகவும் இருக்கலாம்.

ஏனெனில் கட்சி முடிவெடுக்காமல் இருக்கின்றபோது கட்சி என்று சொல்லி சில பேர் தனித் தனியாகவும் பேசியிருக்கலாம். அப்படி பேசி இருப்பதாகத்தான் செய்திகளும் வருகின்றன. எனினும், கட்சி முடிவெடுக்காமல் இருக்கின்றபோது இதற்கான நேரம் வரும்போது பார்த்துக்கொள்வோம்.

மேலும் இந்த விடயத்தில் தமிழரசுக் கட்சியைப் பணிய வைக்கலாம் என்று ஒருவர் சொல்லியிருக்கின்றார். இவரைப் போல் எத்தனையோ பேரை நாங்கள் கண்டிருக்கின்றோம். ஒரு பாரம்பரிய கட்சியைப் பற்றி அப்படியெல்லாம் பேசுவதா?

அதுமட்டுமல்ல யாழ்ப்பாணம் மக்களை உசுப்பேற்றி பணிய வைப்பதாகவும் கூறியிருக்கின்றார். அப்படி உசுப்பேற்றி யாழ்ப்பாணம் மக்களைப் பணிய வைக்க முடியுமா? ஏதோ கதைக்க வேண்டும் என்பதற்க்காக எங்கள் கட்சியைப் பற்றி எதையாவது கதைத்துவிட்டுச் செல்வதா?

உசுப்பேத்தி எங்கள் மக்களை எதுவும் செய்யலாம் என்று யாரும் சொல்வது தவறு. எதனையும் மக்கள் தீர்மானிப்பார்கள். சரியென்றால் ஏற்றுக்கொள்வார்கள் இல்லையென்றால் விலக்கி வைப்பார்கள். இதனைப் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.