வடக்கு மாகாண மக்களுக்கு ஆளுநரின் வேண்டுகோள்.

மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையிலிருந்து வந்த ஊழியர்கள் வடக்கு மாகாணத்தின் எப்பகுதியில் தங்கியிருந்தாலும் உடனடியாக அருகிலிருக்கும் சுகாதார மருத்துவ அதிகாரிக்கு அறிவிக்கும்படி வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் கேட்டுள்ளார்.

இது தொடர்பில் ஆளுநரின் ஊடகப் பிரிவு இன்று அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“கம்பஹா மாவட்டத்திலுள்ள மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் கொத்தணி, நாடு முழுவதும் பரவியிருக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கும் நிலையில், தொற்றாளர்களுடன் தொடர்புடைய பலர் தங்களுடைய தகவல்களை மறைப்பதால் அவர்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பின் மிகக் கடுமையான சவாலை சமூகம் எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

எனவே, மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள், அவர்களோடு தொடர்புடையவர்கள் யாரேனும் வடக்கு மாகாணத்தின் எப்பிரதேசத்தில் தங்கியிருந்தாலும் உடனடியாக அருகிலிருக்கும் சுகாதார மருத்துவ அதிகாரிக்கு அறிவிக்குமாறும், தொடர்ந்து சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறும் வடக்கு மாகாண மக்களுக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்” என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.