கொரோனா நோயாளர்கள் 119 பேர் கம்பஹாவில் தப்பிச் சென்றார்களா?

கொரோனா நோயாளர்கள் 119 பேர்
கம்பஹாவில் தப்பிச் சென்றார்களா?

பொலிஸ் பேச்சாளர் விளக்கம்

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 119 நோயாளர்கள் தப்பிச் சென்றுள்ளனர் என்று அம்மாவட்ட செயலாளர் தெரிவித்த கருத்து உண்மைக்குப் புறம்பானது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை கொரோனா வைரஸ் கொத்தணியுடன் தொடர்புடைய மற்றும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள 119 பேர் தலைமறைவாகியுள்ளனர் கம்பஹா மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார் என்று ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் உண்மைக்கு புறம்பானவை.

குறித்த ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் பரவல் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கான பி.சி.ஆர். பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்போது வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்கள் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளதுடன், ஏனையவர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், இந்த நபர்களுடன் தொடர்பைப் பேணினார்கள் என்று கருதப்படும் நபர்கள் தொடர்பிலும் தகவல்கள் திரட்டப்பட்டு தற்போது அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுடன் தொடர்புகொண்டவர்கள் எவரேனும் இன்னமும் சமூகத்தில் இருப்பார்களாயின் அவர்களை உடனே தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.