14. இந்திய தொடர்புகளும் , இயக்கங்களின் இந்திய அனுபவங்களும் : வெற்றிச் செல்வன்

பகுதி 14

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் என்பது ஆயிரக்கணக்கான கரையான்கள் போன்ற தோழர்கள் புற்று எடுத்து கட்டியது இன்று கஸ்டப்பட்டு கட்டிய கரையான்கள் போன்ற தோழர்கள் இல்லை ஆனால் இன்று நாகப்பாம்பு குடிகொண்டுள்ளது. இது எல்லா இயக்கங்களுக்கும் பொருந்தும்.

நான் சென்னையில் இருந்து புறப்பட்டு மூன்றாம் நாள் காலையில் புதுடில்லி போய்ச் சேர்ந்தேன். எல் கணேசன் எம்பியின் விடுதி இருக்கும் நோர்த் அவென்யு இருபக்கமும் இந்திய பாராளுமன்ற லோக்சபா, ராஜ்யசபா எம்பி களின் ஒரு பகுதியினரின் அடுக்கு மாடி குடியிருப்பாகும்.

அவர்களின் கார் விட கராஜ் விடுதிகளின் பின்பக்கம் இருக்கும். அநேகமாக எல்லா கார் கராஜ்களும் வாடகைக்கு விடப்பட்டு சாப்பாட்டுக் கடைகள் மற்றும் மக்கள் குடியிருப்பாக மாறி இருக்கும்.

நோர்த் அவென்யூ முடிவில் இந்திய ஜனாதிபதி மாளிகையும் மறுமுனையில் மிகப்பெரிய ராம் மனோகர் லோகியா ஆஸ்பத்திரியும் இருக்கிறது. விடுதிகளுக்கு முன்னால் மிகப் பெரிய புல்வெளியும் இருக்கிறது.

186 நோர்த் அவென்யூவில்தான் எல் கனேசன் எம்பி வீடு. அங்கு அவரது உறவினர் சித்தார்த்தன் தங்கியிருந்தார். அவருக்கும் எங்கள் வயசுதான் இருக்கும். சித்தார்த்தன் அங்கு வந்து போகும் எங்கள் இயக்க தோழர்கள் எல்லோருக்கும் மிகமிக உதவி செய்தவர். அதோடு கீழ் வீட்டில் இருந்த வெங்கா எம்பியின் மகன் சம்பத் டெல்லி யுனிவர்சிட்டியில் படித்துக் கொண்டிருந்தவர். எமக்கு மிக உதவி செய்தவர். இவர் தற்போது மதுராந்தகம் என்ற இடத்தில் வக்கீலாக இருக்கிறார். இப்போது இரண்டு கண்ணும் தெரியாது.

பக்கத்தில் இருந்த இன்னொரு எம்பியின் மச்சான் செல்வகணபதி டெல்லி ஜவஹர்லால் யுனிவர்சிட்டியில் படித்தவர். இவர் பின்னாட்களில் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். இவர்களோடு தங்கியிருந்த சம்பத், முருகேசன் போன்றவர்கள் டெல்லியில் நாங்கள் இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி கண்காட்சி வைக்க டெல்லி ஐஐடி ஜவர்கலால் நேரு யுனிவர்சிட்டி, டில்லி யுனிவர்சிட்டி போன்றவற்றில் வைக்க உதவி செய்தார்கள்.

இவர்களில் சம்பத் இந்திய ராணுவத்தில் சேர்ந்து இந்திய அமைதிப் படையில் சேர்ந்து பிரிகேடியர் ஆக திருகோணமலைக்கு பொறுப்பாக இருந்தார் என கேள்விப்பட்டேன். அவர் பின்பு எமது இந்திய நண்பர்களிடம் தாங்கள் முன்பு கற்பனை செய்து இருந்த இலங்கை தமிழ் விடுதலை இயக்கங்கள் பற்றிய கனவு, திருகோணமலையில் தமிழ் இயக்க தலைவர்கள் நடந்து கொண்ட முறை மிக மோசமாக இருந்தது என்றும்,அமைதிப் படை அதிகாரிகளுடன் சேர்ந்து குடிப்பதிலும் விருந்திலும் தான் பொழுதை கழித்தார்கள் என்றும் கூறியுள்ளார்.

நான் சந்திக்க கேட்டேன் மறுத்து விட்டார்.மேற்கூறிய அவர்களே விட இன்னும் பலர் எமக்கு உதவி புரிந்தார்கள். அந்த காலத்தில் தமிழ் விடுதலை இயக்கங்களுக்கு உதவி புரிந்தவர்கள்உதவி செய்தவர்கள் யாரும் பணம் பொருள் தேவைக்காக எங்களுக்குஉதவி செய்யவில்லை. என்பதை முக்கியமாக பதிவு செய்ய விரும்புகிறேன்.

நான் காலையில் டெல்லி வந்தவுடன், எமது வீதியோர கடையில் காலை உணவு உப்புமா ,சாம்பார், டி ரெண்டு ரூபா முடியும். கடை நடத்தியவர் கேரளாவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர். டெல்லி வந்த எமது அனைத்து தோழர்களும் உமாமகேஸ்வரன் சித்தார்த்தன் உட்பட யாவரும் காலை உணவும் டீயும் அங்குதான். கையேந்தி பவன்.

அங்கு ஒரு சிறப்பு நாங்கள் சாப்பிடும் போது தமிழ்நாட்டைச் சேர்ந்த பல எம்பி களும் காலை உணவு உப்புமா ,வடை சாப்பிட வருவார்கள்.

PLO லெபனான் பயிற்சிக்கு அவர்களது விமான டிக்கெட்டை எடுத்துக்கொண்டு சென்ற போது , Connaught place என்ற இடத்தில் இருந்த சிரியன் விமான அலுவலகம் போய், டெல்லி ,டமஸ்கஸ் ,லண்டன் ஒருவழிப்பாதை டிக்கெட்டை கொடுக்க அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இருவழி பாதை டிக்கெட் இருந்தால் திகதி புக் பண்ணி தருவதாக கூறினார்கள்.

எங்கள் திட்டம் லண்டனுக்கு போக டிக்கெட் புக் செய்து டமஸ்கஸில் விமானம் மாறும்போது, வெளியில் சிரியாநாட்டுக்குள் உள்ளிடுவது.

பின்பு நான் போய் மாணிக்கதாசன் கூறிய திலக் என்பவரை சந்தித்தேன். மாணிக்கதாசன் பெயரை கேட்டவுடன் எல்லா உதவியும் செய்து தருவதாக கூறினார். காரணம் மாணிக்கதாசன் 70 – 80 ஆம் ஆண்டுகளில் டெல்லியில் சிட்டி லொட்ஜ் என்ற இடத்தில் தங்கியிருந்த போது சிங்கள பையன்களுக்கும் அங்கிருந்த தமிழ் பையன்களுக்கும் சண்டை வந்தபோது மாணிக்கம் தாசன் லோக்கல் துப்பாக்கி வாங்கி சுட்டுஅவர்களுக்கு பெரிய பிரச்சினையாக வந்ததாக கூறினார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் உமா ,பிரபா உடைந்த பின்பு செல்லக்கிளி , இங்கு திலக்கோடுதான் டெல்லியில் வந்து தங்கி இருந்திருக்கிறார்.1983 நவம்பர்மாதம் தீபாவளி நேரம் K.P என்று அழைக்கப்படும் பத்மநாபன் முதன்முறையாக இந்த திலக்கோடு தான் தங்கி இருந்தார்.

அப்போதுதான் தனது முதல் போதைப்பொருள் வியாபாரத்தை விடுதலைப் புலிகளுக்காக ஆரம்பித்தார். பின்பு K.P மும்பை போய் விட்டார். டெல்லி, மும்பை, பாகிஸ்தான் , கராச்சி , லாகூர் போன்ற இடங்களில் இலங்கை தமிழ் சிங்கள இளைஞர்கள் ஈரான் ஊடாக வெளிநாட்டுக்கும் , ஐரோப்பாவுக்கும் போக வந்து, ஈரானில் மத ஆட்சி வந்தபிறகு பாகிஸ்தான் ஈரான் எல்லை மூடப்பட்டதால் பல இளைஞர்கள் இந்த நாடுகளில் தங்கி விட்டார்கள்.

மும்பை வழியாக ஈரான் போய்விட்டால், லண்டன் வரை பஸ்ஸில் போக கூடிய வசதி இருந்தால்தான். நான் சென்னைக்கு எம்எல்ஏ ஹாஸ்டல் எமது அலுவலகம் மூலம் உமா மகேஸ்வரனுக்கு விமான டிக்கெட் பிரச்சினை பற்றி கூறினேன்.

அவரும் விபரத்தை கேட்டுவிட்டு அன்று மாலை தொலைபேசி மூலம் மாணிக்கதாசன் இரண்டு நாளில் ரயில் மூலம் டெல்லிக்கு வருவார். இருவரும் கலந்து பேசி என்ன செய்யலாம் என்று உடன் முடிவு எடுத்து அறிவிக்கும் படி கூறினார்.

தொடரும்……


அனைத்து பதிவுகளையும் படிக்க இங்கே அழுத்தவும்

Leave A Reply

Your email address will not be published.