ஊடகவியலாளர் நிமலராஜனின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.

யாழில் ஊடகவியலாளர் நிமலராஜனின்
20ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 20ஆவது ஆண்டு  நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது.

யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், யாழ். ஊடக அமையத்தில் இன்று மதியம்  குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெெற்றது.

இதன்போது நிமலராஜனின் திருவுருவப் படத்திற்கு அவரது சகோதரன் சுடரேற்றினார். அதனைத் தொடர்ந்து யாழ். மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் மலர்மாலை அணிவித்தார்.

தொடர்ந்து வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர் ச.சஜீவன் மற்றும்  ஊடகவியலாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

போர் இடம்பெற்ற காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து , துணிவாக ஊடகப் பணியாற்றியவரே மயில்வாகனம் நிமலராஜன். இவர் பி.பி.சி.யின் தமிழ் மற்றும் சிங்கள சேவை, ராவய மற்றும் தமிழ்ப் பத்திரிகைகள் ஆகியவற்றில் பணியாற்றியிருந்தார்.

கடந்த 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி யாழ். மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளை அவரது வீட்டுக்குள் புகுந்த ஆயுததாரிகள் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு படுகொலை செய்தனர். அதன்போது அவர் எழுதிக்கொண்டு இருந்த கட்டுரை மீது இரத்தம் தோய்ந்திருந்தது .

ஆயுததாரிகள் நிமலராஜனைப் படுகொலை செய்த பின்னர், வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதலையும் மேற்கொண்டனர். அதன்போது வீட்டில் இருந்த நிலமராஜனின் தந்தை சங்கரப்பிள்ளை மயில்வாகனம், தாய் லில்லி மயில்வாகனம்  மற்றும் மருமகன் ஜெகதாஸ் பிரசன்னா ஆகியோர் படுகாயமடைந்திருந்தனர்.

குறித்த படுகொலை சம்பவம் நடைபெற்று 20 வருடங்கள் கடந்த நிலையிலும் இதுவரை விசாரணைகள் எதுவும் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.