20ஐ எதிர்த்து நாளை வீடுகளில் மின் விளக்குகளை அணைத்து ஓர் ஒளி விளக்கை மாத்திரம் ஏற்றுங்கள்

20ஐ எதிர்த்து நாளை வீடுகளில் மின் விளக்குகளை
அணைத்து ஓர் ஒளி விளக்கை மாத்திரம் ஏற்றுங்கள்

ஒன்றிணைந்த இளையோர் அணி வேண்டுகோள்

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவு நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை இரவு 8 மணிக்கு வீடுகளில் மின் விளக்குகளை அணைத்து மூன்று நிமிடங்களுக்கு ஒரு ஒளி விளக்கை மாத்திரம் ஏற்றுமாறு ஜனநாயகத்துக்கான ஒன்றிணைந்த இளையோர் அணி வேண்டுகோள் விடுத்துள்ளது.

யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே குறித்த அமைப்பின் பிரதிநிதி அ.பெனிஸ்லஸ் துஷான் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எங்களுடைய உடனடி நோக்கமாக தற்போது கொண்டு வரப்பட்டிருக்கும் 20ஆவது திருத்தத்துக்கு எதிரான விழிப்புணர்வை நாங்கள் செய்துகொண்டிருக்கின்றோம்.

மிக முக்கியமான இந்த ஜனநாயக விரோதமான 20ஆவது திருத்தம் தொடர்பாக மக்களுக்கு விழிப்பூட்டப்பட வேண்டும் என்றும், அத்தோடு எங்களுடைய அரசியல்வாதிகளுக்கும் இது சார்ந்த விழிப்புணர்வு கிடைக்க வேண்டும் என்றும் செயற்பட்டு வருகின்றோம்.

கடந்த மூன்று தினங்களாக மதத் தலைவர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், துறைசார் அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் ஆகியோரை நாங்கள் சந்தித்துள்ளோம்.

உதாரணமாக மதகுருமார்கள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கம், இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கம், இலங்கை தமிழ் அதிபர் சங்கம் மற்றும் வணிகர் கழகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளை நாம் சந்தித்துள்ளோம்.

குறித்த பிரதிநிதிகளுடைய கலந்துரையாடலுக்கு ஏற்ப நாளை எங்களுடைய மனுக்களை எங்களுடைய சமூகம் மற்றும் ஏனைய சமூகத்தில் இருந்து தெரிவுசெய்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பவுள்ளோம்.

அத்தோடு, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கும் எங்களுடைய மனுக்களை அனுப்பவுள்ளோம்.

மிக முக்கியமாக நாங்கள் மக்களிடம் கேட்டுக்கொள்வது யாதெனில் நாளை 20 ஆம் திகதி 20 ஆவது மணி (இரவு 8) நேரத்தில் உங்கள் வீடுகளில் ஒரு விழிப்புணர்வுப் போராட்டத்தை நீங்கள் செய்யவேண்டும்.

தற்போதய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக அது சார்ந்த சட்டங்களைப் பின்பற்றி குறித்த மணி நேரத்தில் மூன்று நிமிடங்களுக்கு உங்களுடைய வீட்டின் மின் விளக்குகளை அணைத்து இருளாக இருக்கும் காலப்பகுதியில் ஒரு ஒளி விளக்கை ஏற்றி உங்களுடைய எதிர்ப்புகளைத் தெரிவித்துக்கொள்ள முடியும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.