கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் பேரவையினருக்கு யாழ். முஸ்லிம் மக்கள் ஒன்றியம் ஆதரவு!

ேசிய மக்கள் சக்தியின் பொறிக்குள் வீழாது காலச் சூழலுக்கு ஏற்ப தமிழ் தேசியப் பரப்பில் பயணிக்கும் கட்சிகளுடன் ஒன்றிணைந்து பயணிக்கும் நோக்கில் இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியப் பேரவைக்கு ஆதரவை வழங்கவுள்ளதாக யாழ். முஸ்லிம் மக்கள் ஒன்றியத்தின் தலைவர் அப்துல் பரீக் ஆரீப் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் பேரவைக்கு ஆதரவு வழங்கும் அறிவிப்பை விடுத்திருந்த யாழ். முஸ்லிம் மக்கள் ஒன்றியம் அது தொடர்பில் ஊடக சந்திப்பை இன்று புதன்கிழமை யாழ். ஊடக மையத்தில் நடத்தியது.

இதன்போது யாழ். முஸ்லிம் மக்கள் ஒன்றியத்தின் தலைவர் மேலும் தெரிவிக்கையில்,

“அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸுடன் யாழ். முஸ்லிம் மக்களுக்கு நெருங்கிய தொடர்பும் நட்பும் இருந்து வருகின்றது.

அதுமட்டுமல்லாது கொள்கையில் தடுமாறா நிலையுடன் பயணிக்கும் கஜேந்திரகுமார் தலைமையிலான கட்சி எமது மக்களின் நலன்களில் அதிக அக்கறையுடன் பயணித்து வருகின்றது.

இவ்வாறான நிலையில் காலத்தின் சூழ்நிலைக்கேற்ப கொள்கையுடன் தமிழ்த் தேசியப் பேரவை இருக்கின்றது.

அதனடிப்படையில் இம்முறை நடைபெறும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எமது அமைப்பின் ஆதரவை தமிழ்த் தேசியப் பேரவைக்கு வழங்குவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம். எனவே, முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டு தமிழ்த் தேசியப் பேரவைக்கு ஆதரவை வழங்க வேண்டும்.” – என்றார்.

இந்த ஊடக சந்திப்பில் யாழ். முஸ்லிம் மக்கள் ஒன்றியத்தின் உறுப்பினர் எம்.எஸ். ரஹீம் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.