வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறிது கால அவகாசம் தாருங்கள் – மக்கள் அலையெனத் திரண்ட மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி வேண்டுகோள்.

“நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறிது கால அவகாசம் தாருங்கள்.” – என்று மக்கள் மற்றும் தொழிற்சங்கங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க.
கொழும்பு – காலிமுகத்திடலில் நேற்று நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்த மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்,
“நாட்டில் தற்போது ஒரே அரசியல் சக்தியாக தேசிய மக்கள் சக்தி மட்டுமே உள்ளது. நாட்டின் எதிர்காலமும் அதன் மக்களும் தேசிய மக்கள் சக்தியையே நம்பியுள்ளனர். தேசிய மக்கள் கட்சிக்கு வெளியே எந்தச் சவாலும் இல்லை. அந்தச் சவால் தேசிய மக்கள் சக்தி கட்சிக்குள்ளேயே உள்ளது. முரண்பாடுகளை எதிர்கொள்வதும் புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறிக்கொள்வதும் நமது சவால்.
ஆறு மாதங்களுக்குள் யாரும் விளைவுகளை எதிர்பார்க்க முடியாது. சரியான திட்டத்துடன் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு அரசு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது. எனவே, தொழிற்சங்கங்கள் தங்கள் பழைய மனப்பான்மைகளை கைவிட்டு, நாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சியில் அரசுடன் இணைய வேண்டும். அற்ப விடயங்களுக்காகப் போராட வேண்டாம்.
ஓர் அரசியல் சக்தியாக அரசமைப்பு, வர்த்தமானிகள், சுற்றறிக்கைகள் மூலம் எமக்குக் கிடைத்த சலுகைகளை விட்டுக் கொடுத்துள்ளோம். நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறிது கால அவகாசம் தாருங்கள்.” – என்றார்.
