மட்டக்களப்பில் யானை தாக்கி விவசாயி ஒருவர் பரிதாபப் பலி!

மட்டக்களப்பு, வவுணதீவு, பாலைக்காடு வயல் பிரதேசத்தில் வேளாண்மைக்கு நீர் பாய்ச்சச் சென்ற விவசாயி ஒருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.
நாவற்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய வைரமுத்து மகாலிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார்.
மேற்படி விவசாயி வழமை போல் வேளாண்மைக்கு நீர் பாய்ச்சுவதற்காக நேற்று இரவு சென்றவர் இன்று காலை வரையில் வீடு திரும்பி வராத நிலையில் உறவினர்கள் அவரைத் தேடிச் சென்றபோது அவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.
பின்னர் இது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.