மீண்டும் கூட்டமைப்பாகச் செயற்பட காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குத் தமிழரசுக் கட்சி அழைப்பு.

மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது என்று அந்தக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், கல்வியங்காட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையான சபைகளைக் கைப்பற்றி ஆளும் வகையில் முதல் நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி இருக்கின்றது.

அவ்வாறு எமக்கு வாக்களித்து எம்மை அங்கீகரித்து ஏற்றுக்கொண்ட – ஊக்கமளித்த தமிழ்த் தேசியத்தை நேசிக்கின்ற அனைவருக்கும் வடக்கு, கிழக்கில் வாழும் மக்கள் எல்லோருக்கும் கட்சி சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மீண்டெழுவதற்கான வாய்ப்பைத் தந்த வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி கூறுகின்றோம்.

மிகக் கேவலமாக தேர்தல் காலத்தில் எங்களை எதிர்த்துப் போட்டியிட்டு இல்லாதவற்றைச் சொல்லி தங்களின் மகிழ்ச்சியைக் கொண்டாடியவர்கள் இப்போது நாங்கள் தேசிய மக்கள் கட்சியோடு டீல் பேசுகின்றோம் என்று பொறுப்புள்ளவர்களே குறிப்பிட்டுப் பேசுகின்றார்கள்.

தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் என்ற முறையில் பொறுப்போடு இதனை மறுதலிக்கின்றேன். எந்தச் சந்தர்ப்பத்திலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி தேசிய மக்கள் சக்தியோடு இணைந்து ஆட்சி அமைப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எந்த டீலையும் செய்யவில்லை. இந்தப் பரப்புரைகள் வேலை செய்யாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தேசிய மக்கள் சக்தியின் முக்கிய பிரமுகர் நளிந்த ஜயதிஸ்ஸ கூட தம்மைத் தமிழ்க் கட்சிகள் அணுகவில்லை என்பதைக் கூறியிருக்கின்றார்.

அடுத்த கட்ட செயற்பாடுகளை ஆராய்வதற்காக நாளை சனிக்கிழமை அரசியல் குழு கூடுகின்றது. எந்தெந்தச் சபைகளில் எவ்வாறு செயற்படுவது?, யார் யாரை முன்னிலைப்படுத்தி தவிசாளர், மேயரைத் தீர்மானிப்பது? பற்றிக் கலந்துரையாடவுள்ளோம்

ரெலோ, புளோட் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் எங்கள் கட்சியின் பதில் பொதுச்செயலாளருடன் பேசியுள்ளார்கள். ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளார்.

மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.