சங்கு கூட்டணியின் ஆதரவைப் பெற தமிழரசு, காங்கிரஸ் கட்சிகள் பேச்சு.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்க ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஆதரவைப் பெறுவதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவை ஆகியவை அக்கட்சியுடன் பேச்சுகளில் ஈடுபட்டுள்ளன.
பல சபைகளில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஆதரவைப் பெறும் கட்சிகளே ஆட்சி அமைக்கக்கூடிய சூழ்நிலை காணப்படுவதனால், அக்கட்சியின் ஆதரவைப் பெறுவதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியப் பேரவை ஆகியவை கடந்த இரு தினங்களாகப் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றன.
இது தொடர்பில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத் தலைவர்களில் ஒருவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறுகையில்,
“உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற்குத் தமக்கு ஆதரவு தருமாறு பல்வேறு தரப்பினரும் எம்முடன் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளனர்.
எமது கூட்டணியில் உள்ள ஏனைய தரப்பினருடனும் கலந்துரையாடி தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை மலினப்படுத்தாத தரப்பினருக்கு ஆதரவு வழங்குவோம்.” – என்றார்.