கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்ற ஹரிக்கு இளங்குமரன் எம்.பி. வாழ்த்து!

கனடாவின் பிரதமர் மார்க் கார்னியின் அமைச்சரவையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்ற ஹரி ஆனந்தசங்கரிக்கு யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

“உலகலாவிய ரீதியாக தமிழர்கள் பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர்களாக தமது தடத்தினை ஆழமாகப் பதித்துள்ளனர்.
அரசியல், வைத்தியத்துறை, விளையாட்டுத்துறை, விஞ்ஞானம் மற்றும் சினிமாத்துறை எனத் தமிழர்கள் கால்த்தடம் பதிக்காத துறைகள் இல்லை.

அந்தவகையில் தான் எமது நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் எம்மில் ஒருவர் கனேடிய மக்களாலும் – அரசாங்கத்தாலும் மதிக்கப்பட்டு இன்று மிக முக்கியமான பொறுப்பான பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இன, மத, நிற பேதங்களைக் கடந்து ஒரு தமிழரை அந்த நாட்டு குடியுரிமை பெற்ற மக்கள் ஏற்றுக்கொள்வதென்பதும் – அதற்கு மேலாக அந்த நாட்டின் அரசு அவருக்கு மிகப் பெரிய பதவியை வழங்குவதென்பதும் அவருடைய திறமைக்கும் – நேர்மைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக அமைகின்றது. இது மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையும் கூட.

கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியைக் கடந்த காலங்களில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளேன்.

சட்ட வல்லுநரும் – மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான அவருக்கு மிகப் பொருத்தமான பதவியை அந்த நாட்டு அரசாங்கம் வழங்கியுள்ளது.

இதனூடாக அந்த நாட்டினுடைய ஒட்டுமொத்த மக்களுடைய பாதுகாப்பு மற்றும் உரிமைகள் நிலைநாட்டப்படுவதுடன் – விசேடமாகக் கனடாவில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்களுக்குப் புத்துணர்வினைக் கொடுப்பதாக இந்தப் பதவிப்பிரமாணம் அமைந்துள்ளது.” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.