சட்டவிரோத மணலுடன் தப்பியோடிய டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு!

யாழ். கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரணிப் பகுதியில் சட்டவிரோத மணலுடன் தப்பியோடிய டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை ஒரு மணியளவில் வரணி – மந்துவில் வீதியில் இயற்றாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பளைப் பகுதியிலிருந்து சட்டவிரோத மணலுடன் சென்ற டிப்பர் வாகனத்தை எழுதுமட்டுவாள் பகுதியில் கடமையில் இருந்த கொடிகாமம் பொலிஸார் நிறுத்த முயற்சித்தபோது குறித்த டிப்பர் வாகனம் நிறுத்தாது கொடிகாமம் பகுதியை நோக்கித் தப்பியோடியது.

இதையடுத்து பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையால் கொடிகாமம் பகுதியிலும் டிப்பர் வாகனத்தை நிறுத்தப் பொலிஸார் முயற்சித்தனர். எனினும், டிப்பர் வாகனம் நிறுத்தாது வரணியை நோக்கித் தப்பியோடியது

இதையடுத்து பொலிஸார் குறித்த டிப்பர் வாகனத்தைத் தமது வாகனத்தில் துரத்திச் சென்றனர். இந்தநிலையில் டிப்பர் வாகனம் வரணி – மந்துவில் வீதியால் திரும்பிச் சென்று வேம்பிராய் நோக்கி மிக வேகமாகத் தப்பியோடியது.

இதன்போது டிப்பரில் இருந்தவர்கள் பொலிஸாரின் வாகனத்தை நோக்கி டார்ச் லைற் மூலம் பிரகாசமான ஒளியைப் பாய்ச்சினர்.

இதனால் தமது வாகனத்தைச் செலுத்த முடியாத நிலையில் பொலிஸார் டிப்பர் வாகனத்தின் ரயர்களை நோக்கித் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

துப்பாக்கி வேட்டுக்கள் டிப்பர் வாகனத்தின் ரயரை வெடிக்கச் செய்ததுடன் எரிபொருள் தாங்கி மீதும் துளையிட்டது.

இதையடுத்து குறித்த டிப்பர் வாகனத்தை நிறுத்திவிட்டு சாரதி உட்பட இரண்டு சந்தேகநபர்கள் தப்பியோடினர் என்று கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிரோத மணலுடன் சென்ற டிப்பர் வாகனத்தைக் கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் தப்பியோடிய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.