கொழும்பில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்க இடமளியோம்! – மொட்டுக் கட்சி திட்டவட்டம்.
“கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மைப் பலத்தை தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வழங்கவில்லை. எனவே, அக்கட்சி ஆட்சியமைப்பதற்கு எந்தchசந்தர்ப்பத்திலும் ஆதரவு வழங்கப்படமாட்டாது. ஏனெனில் அது மக்கள் ஆணைக்கு முரணான செயலாக அமையும். எதிரணிகள் வசமே பெரும்பான்மைப் பலம் உள்ளது. ஆகவே, அரசுக்கு எதிரான சக்திக்கு ஆதரவு வழங்குவதில் எமக்குப் பிரச்சினை இருக்காது.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
“ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளின் கொள்கைகள் வெவ்வேறானவை. எனினும், நாட்டின் நலன் கருதி பொது விடயங்களின்போது ஒத்துழைப்புடன் செயற்படக்கூடும்.” – என்றும் அவர் ஊடகங்களிடம் மேலும் கூறினார்.
