காங்கேசன்துறையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் புதிய எரிபொருள் களஞ்சியசாலை அங்குரார்ப்பண நிகழ்வு.

யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் புதிய எரிபொருள் களஞ்சியசாலை அங்குரார்ப்பண நிகழ்வு இன்று முற்பகல் 10.30 மணியளவில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்தநாயக்க, கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ச.ஸ்ரீபவானந்தராஜா, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ராஜ கருணா, பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்தநாயக்க ஆகியோர் இணைந்து எரிபொருள் களஞ்சியசாலையைத் திறந்து வைத்தனர். இதன்போது மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன.

யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இந்தக் களஞ்சியசாலைகள் மூலம் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் காலங்களில் ரயில் சேவை மூலம் யாழ்ப்பாணத்துக்கு எரிபொருளைக் கொண்டு வந்து காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் பிமல் ரத்தநாயக்க தெரிவித்தார்.

29 வருடங்களுக்கு முன்பு காங்கேசன்துறையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் களஞ்சியசாலை இயங்கி வந்தது. அது யுத்தம் காரணமாக அழிவடைந்ததையடுத்துப் தற்போது புதிய எரிபொருள் களஞ்சியசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.